Skip to main content

முதல்வர் வருகையால் கோவையில் போக்குவரத்து மாற்றம்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

routes change in Coimbatore due to CM's visit

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 22ஆம் தேதி கோவைக்கு வருகைபுரிந்தார். அதனால் அங்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் கோவை வந்ததையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பாக கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘காலை 6:00 மணி முதல் மறுஅறிவிப்பு வரும்வரை கனரக வாகனங்கள் கோவை மாநகருக்குள் இயக்க அனுமதியில்லை.

 

அவினாசி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் தொட்டிபாளையம் சந்திப்பு விரியம்பாளைம், கைகோலாபாளையம் வழியாக சத்தி சாலைக்குச் செல்ல வேண்டும். அவினாசி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் கோல்டுவின்ஸ் சந்திப்பு, ஹவுசிங் யூனிட், காளப்பட்டி சாலையை அடைந்து சரவணம்பட்டி வழியாக சத்தி சாலைக்குச் செல்ல வேண்டும். அவினாசி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் எஸ்.என்.ஆர். சந்திப்பில் வலதுபுறம் திரும்பி நவ இந்தியா சாலை, ராமகிருஷ்ணா கல்லூரி, 100 அடி சாலை மேம்பாலம் வழியாக மேட்டுப்பாளையம் சாலைக்குச் செல்ல வேண்டும். திருச்சி சாலையிலிருந்து வரும் பேருந்துகள் சுங்கம் வழியாக கிளாசிக் டவர் சந்திப்பு, அரசு மருத்துவமனை, லங்கா கார்னர், கூட்செட் ரோடு, பழைய மேம்பாலம், நஞ்சப்பா சாலை வழியாக காந்திபுரம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

 

பழைய மேம்பாலம் வழியாக அவினாசி சாலையில் வரும் வாகனங்கள் ஜேஎம் பேக்கரி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, செஞ்சிலுவை சங்கம் ரயில் நிலையம் வழியாக திருச்சி சாலைக்குச் செல்ல வேண்டும். அவினாசி சாலையிலிருந்து வரும் வாகனங்கள்  விருந்தினர் மாளிகை வழியாக சுங்கம் மற்றும் திருச்சி சாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுங்கம் மற்றும் புலியகுளம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் விருந்தினர் மாளிகை வழியாகச் செல்ல அனுமதியில்லை. மாற்று வழியாக அவினாசி சாலைக்குச் செல்ல டிஐஜி அலுவலகம் வந்து ரெட்ஃபீல்ட் வழியாகப் புலியகுளம் சென்று, இடதுபுறம் திரும்பி கிட்னி சென்டர் வழியாக அவினாசி சாலையை அடையலாம்.

 

எல்.ஐ.சி. சாலையில் வாகனங்கள் செல்லக் கூடாது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், திருப்பூர் அவினாசி, பல்லடம் செல்லக் கூடிய வாகனங்கள் காந்திபுரம் சந்திப்பு, ஆர்.வி.ரவுண்டானா, மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, மணிஸ் பள்ளி சந்திப்பு வழியாக லட்சுமி மில் சந்திப்பில் அவினாசி சாலையை அடைந்து மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். அவினாசி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் வர வேண்டிய பேருந்துகள் மற்றும் வாகனங்கள் ஜிகேஎம், அண்ணா சிலை, எல்.ஐ.சி. வழியாக வராமல், லட்சுமி மில் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.