
காங்கிரஸ் கட்சி சார்பில் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இன்றும் (08.04.2025) நாளையும் (09.04.2025) என இரு நாட்கள் தேசிய மாநாட்டை அக்கட்சி நடத்தி வருகிறது. அக்கட்சியின் தேசிய மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், அக்கட்சியின் காரியக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி. கலந்துகொண்டார். இத்தகைய சூழலில் தான் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். அப்போது இதனைக் கண்ட கட்சி நிர்வாகிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மயக்கமடைந்த ப. சிதம்பரத்தைக் கட்சி நிர்வாகிகள் அம்புலன்ஸை நோக்கித் தூக்கிச் செல்லும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் இது தொடர்பாக அவரது மகனும், சிவகங்கை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் தந்தை நலமாக இருக்கிறார். அவர் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டார். அகமதாபாத்தில் நிலவிய கடுமையான வெப்பம் மற்றும் நீரிழப்பு காரணமாக அவர் மயக்கம் அடைந்தார். மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை தற்போது இயல்பாக உள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ப. சிதம்பரம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தி அறிந்து கார்த்திக் சிதம்பரத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு சிதம்பரத்தின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.