
தெலுங்கானா மாநிலம் மிர்யாளகுடாவில் உள்ள பொக்கனுந்தலபாடு கிராமத்தை சேர்ந்தவர் மல்லீஸ்வரி. 27 வயதாகும் இவர் ஐதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். வேலை காரணமாக அங்கே உள்ள விடுதியில் தங்கி வேலைக்குச் சென்று வருகிறார்.
இதனிடையே மல்லீஸ்வரிக்கு அதே கிராமத்தை சேர்ந்த ஜனா ரெட்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் ஜனா ரெட்டியின் வீட்டிற்கு தெரியவந்ததுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் ஜனா ரெட்டியின் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தனது மகன் ஜனா ரெட்டிக்கு திருமணம் செய்ய வேறு ஒரு பெண்ணை பார்த்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மல்லீஸ்வரியிடம் இருந்து விலகிய ஜனா ரெட்டி வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் மல்லீஸ்வரி கடும் மன வேதனை அடைந்துள்ளார். காதலன் ஏமாற்றிவிட்டதை நினைத்து மல்லீஸ்வரி தினந்தோறும் அழுது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று தனக்கு தானே விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து மல்லீஸ்வரியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜனா ரெட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலன் ஏமாற்றியதால் மன உடைந்து காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.