Skip to main content

வறுமையில் வாடுகிறேன்... வேலை வேண்டும்... சேலம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்! 

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

சேலம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மர்மக்கடிதம் வந்ததையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் ரயில்வோ கோட்ட மேலாளர் சுப்பாராவுக்கு நேற்று (செப். 20) ஒரு மர்மக்கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், 'எனக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். எனக்கு ரயில்வே துறையில் வேலை வழங்க வேண்டும். நான் வறுமையில் வாடுகிறேன். என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும்.

 

Bomb  Threat on Salem railway station

 

வண்டி எண் 22652, 12681, 16627, 12675, 12695 ஆகிய ரயில்களில் வெடிகுண்டு வெடிக்கும். வெடிகுண்டுகளை டிஎன் 39 யு 3458 என்ற வண்டியில் கொண்டு வந்து வெடிக்கப்படும். உயிர்ச்சேதம் நூற்றுக்கும் மேல் இருக்கும்,' என்று எழுதப்பட்டு இருந்தது.

இந்த கடிதத்தை ரயில்வே கோட்ட மேலாளர், சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் கொடுத்து புகார் செய்தார். இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சேலம் சூரமங்கலம் மற்றும் டவுன் ரயில் நிலையங்களில் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
 

Bomb  Threat on Salem railway station


இதற்கிடையே, சந்தேகத்தின்பேரில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்த மணிவேல் (50) என்பவரை சூரமங்கலம் ரயில் நிலைய காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர் ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை சட்ட விரோதமாக வாங்கி வெளிச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளது தெரிய வந்தது. இது தொர்பாக அவர் மீது 3 வழக்குகள் இருப்பதும், ஒருமுறை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.


அவர், 'என்னைப் பிடிக்காத யாரோ மிரட்டல் கடிதத்தில் என்னுடைய மோட்டார் சைக்கிளின் பதிவெண்ணை குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்கள். எனக்கும் மிரட்டல் கடிதத்திற்கும் சம்பந்தமில்லை,' என்று கூறியுள்ளார். காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.