Skip to main content

ரஜினிக்கு சென்ற சர்வே ரிப்போர்ட்... அரசியல் குறித்து எடுத்த திடீர் முடிவு... நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு!

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் ரஜினி மக்கள் மன்ற  நிர்வாகிகள் மற்றும் ஊடகத்தைச் சந்தித்த ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் கட்சிக்கு மட்டுமே நான் தலைமை ஏற்பேன். முதல்வர் பதவியை நான் ஏற்கமாட்டேன். என்னை வருங்கால முதல்வர்... வருங்கால முதல்வர்  என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சி வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் அப்படி மக்களிடம் மாற்றத்துடன் கூடிய எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன் என்றார்.

 

rajini



இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தான் அறிவித்த கருத்துக்குப் பெண்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஆதரவு எப்படி உள்ளது என்று ரஜினி ஒரு சர்வே எடுக்கத் திட்டமிட்டார். அதற்கு ஒரு தனிக்குழுவை அனுப்பி மக்களிடையே தனது கருத்துக்கு ஆதரவு எந்தளவு உள்ளது என்று கருத்துக் கேட்டு வாருங்கள் என்று அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. தற்போது அந்தக் குழு கொடுத்த சர்வே முடிவைப் பார்த்து ரஜினி மகிழ்ச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த சர்வே முடிவில் ரஜினியின் கருத்துக்குப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு ரஜினியின் கருத்து கிராமப்புற பகுதிகளில் ரஜினியின் மூன்று அம்ச திட்டத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் அந்தக் குழு கொடுத்த சர்வே ரிப்போர்ட்டில் மிகக் குறைந்த சதவிகிதத்தனர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு அந்தக் குழு கருத்துக்கணிப்பை வீடியோவாக ரஜினியிடம் கொடுத்துள்ளதாகச் சொல்கின்றனர். இதனால் ரஜினி மிகுந்த உற்சாகத்தில் கட்சி பெயரை சீக்கிரமாக அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சர்வே முடிவால் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் உற்சாகத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.

Next Story

'பாஜகவைப் புறக்கணியுங்கள்' - குஜராத்தில் வார்னிங் !

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
'Ignore BJP' - Warning to BJP in Gujarat

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தநிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பேசிய பேச்சு ஒரு சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வேட்பாளரை மாற்ற வேண்டும் என ராஜ்புத் சமூக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா அண்மையில் பேசும் போது, 'ராஜ்புத் சமூக ராஜாக்கள் ஆங்கிலேயர்களுக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் நெருக்கமாக இருந்தனர்' என பேசியது அந்த சமூக மக்களிடையே சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

NN

இது சர்ச்சையான நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்ததால் தனது பேச்சுக்கு ரூபாலா மன்னிப்பு கோரி இருந்தார். இருப்பினும் ரூபாலாவின் மன்னிப்பை ஏற்க மறுத்த ராஜ்புத் மக்கள் அவரை மாற்றி விட்டு வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜகவிற்கு வலியுறுத்தல் கொடுத்துள்ளனர்.

ராஜ்புத் சமூகத்தின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று பாஜக தலைவர்களுடன் பலமணி நேரம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் பாஜகவின் சமரசத்தை ஏற்க ராஜ்புத் சமூக சங்கங்களின் நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர். பாஜக வேட்பாளர் ரூபாலாவை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளதோடு, அவரை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் வசிக்கும் 22 கோடி ராஜ்புத் பிரிவினர் பாஜகவை புறக்கணிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சுமார் 25 லட்சம் மக்கள் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்களது எச்சரிக்கை பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மட்டுமின்றி ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களிலும் கணிசமாக ராஜபுத் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அதனால் அங்கும் பாஜகவுக்கு நெருக்கடி முற்றும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.