
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று பைசரன் புல்வெளிகளில் நேற்று ((22.04.2025) குதிரை சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது ராணுவ சீருடை அணிந்து வந்த பயங்கரவாத கும்பல், சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் 3 பயங்கரவாதிகளின் வரைபடம் வரையப்பட்டுள்ளது. அஷிஃப் ஃபௌஜி, சுலைமான் ஷா, அபுத் தல்ஹா ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 6 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்திய நிலையில் 3 பேரின் வரைபடங்கள் மற்றும் பெயர்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவங்களை பயங்கரவாதிகள் தங்கள் தலையில் பொருத்தியிருந்த அதிநவீன ஹெல்மெட் கேமராவில் பதிவு செய்தது தெரிய வந்துள்ளது. பைன் மரக்காடுகள் உள்ள பைரசன் பள்ளத்தாக்கிற்கு வந்தது முதல் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு திரும்பியது வரை அனைத்து காட்சிகளும் பதிவாகி உள்ளது. சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொள்வதற்கு தேர்வு செய்தது; தாக்கும்போது உறவினர்கள் கதறி அழுதது போன்ற இதயத்தை ரணமாக்கும் காட்சிகள் கேமராவில் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சவுதிக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடி இந்த தாக்குதல் குறித்து அறிந்து தாயகம் திரும்பியுள்ளார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அவசர அமைச்சரவை கூட்டம் தற்பொழுது கூடியுள்ளது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த தாக்குதலுக்கான பதிலடி மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அவசர அமைச்சரவை கூட்டப்பட்டுள்ளது.