Skip to main content

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
The court asked question for ncb

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இதற்கிடையே சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சார்பில் சீல் வைக்கப்பட்டது.

இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் சீல் வைத்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்க கோரி ஜாபர் சாதிக் வழக்கறிஞர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (05.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்?” என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. அதற்கு, “சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என என்.சி.பி. தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் ஜாபர் சாதிக் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை முடித்து வைத்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் வீட்டின் சீல் அகற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

நிர்மலா தேவி வழக்கு; ‘தண்டனை விவரம் எப்போது’ - நீதிமன்றம் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Nirmala Devi case; 'Details of punishment when' - court announcement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அப்போது சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி தலைமையில் 9 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். நிர்மலாதேவி உள்ளிட்ட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த விவகாரம் குறித்து அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். சந்தானமும் விசாரணை நடத்தினார். அதே சமயம் இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இதற்கிடையே பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் (DYFI) மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாணவிகள், புகாரளிக்கும் விசாகா கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை? ஆறு ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று காமராஜர் பல்கலைக்கழகத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ‘ஜூன் 7ஆம் தேதிக்குள் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி விளக்கமளிக்க வேண்டும்.’ என்றும் உத்தரவிட்டது. தமிழக அரசுத் தரப்பில்  ‘நிர்மலா தேவி வழக்கில் கீழமை நீதிமன்றம் ஏப்ரல் 26 ஆம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது’எனத் தெரிவிக்கப்பட்டது. 

Nirmala Devi case; 'Details of punishment when' - court announcement

அதனைத் தொடர்ந்து தீர்ப்பு நாளான கடந்த 26 ஆம் தேதி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அப்போது, ‘உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை’ என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். அன்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் இன்று (29.04.2024) வழங்கியுள்ளது. இதற்காக நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2ஆவது மற்றும் 3ஆவது நபர்களான முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரான பேராசிரியை நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்து அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது தீர்ப்பை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் வாதிட்டார். அதற்கு பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தீர்ப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில் நிர்மலா தேவிக்கான தண்டனை விவரங்கள் நாளை (30.04.2024) அறிவிக்கப்பட உள்ளது என ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த தீர்ப்பு குறித்து நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் பேசுகையில், “நிர்மலா தேவி குற்றவாளி என உறுதியாகியுள்ளது. அவருக்கு வழங்கக் கூடிய தண்டனை குறித்து விவாதம் செய்ய இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வர சொன்னார்கள். கருப்பசாமி, முருகன் ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை விவரம் இன்றோ, நாளையோ வெளியாகலாம்” எனத் தெரிவித்தார். மேலும் இது குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் பேசுகையில், “சமூகத்திற்கு தேவையான தீர்ப்பை இந்த நீதிமன்றம் வழங்கியுள்ளது. முதல் குற்றவாளியான நிர்மலாதேவி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் தரப்பு எதிரிகள் மீது அரசு தரப்பில் குற்றம் நிரூபிக்கபடவில்லை என கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இவர்களுக்கு போதுமான தண்டனைகள் வழங்கக்கூடிய சாட்சிகள் இருப்பதாக அரசு தரப்பு கருதுகிறது. எனவே இது சம்பந்தமாக மேல்முறையீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.