Skip to main content

12,000 ஆண்டுகள் தொடர் வரலாற்றுச் சிறப்புடன் நுண்கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு! 

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

Discovery of fine stone tools with a series of 12,000 years of historical significance!

 

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூரில் நுண்கற்காலம், புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 12,000 ஆண்டுகள் தொடர் வரலாற்றுச் சிறப்புகொண்ட இப்பகுதியை அகழாய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

திருவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூர் ஊராட்சியில் உள்ள புதிய வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையத்தின் எதிரில், கொல்லம், மதுரை தேசிய நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சு.சிவகுமார், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரி முதுகலை தமிழ்த்துறை மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் து.மனோஜ் ஆகியோர் கள மேற்பரப்பாய்வு செய்தனர். அப்போது நுண்கற்காலத்தைச் சேர்ந்த ஒரு சுரண்டி, புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கற்கோடரி, முதுமக்கள் தாழியின் உடைந்த ஓடுகள், இரும்புத்தாதுக்கள், இரும்புக்கழிவுகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. 

 

Discovery of fine stone tools with a series of 12,000 years of historical significance!

 

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது; “இங்கு கண்டெடுக்கப்பட்ட நுண்கற்காலக் கருவியின் நீளம் 4 செ.மீ. அகலம் 4.5 செ.மீ. ஆகும். இது செர்ட் வகை கல்லால் செய்யப்பட்ட சுரண்டி ஆகும். நுண்கற்காலம் கி.மு.10,000 முதல் கி.மு.3,000 வரையிலானது. நுண்கற்காலக் கருவிகள் அளவில் மிகச்சிறியவை. பழைய கற்காலத்தில் கருவிகள் செய்யும்போது உடைந்த சிறிய துண்டுகளை நுண்கற்காலத்தில் அம்புமுனைகள், சிறுகத்திகள், சுரண்டிகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.

 

இங்கு கண்டெடுக்கப்பட்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த சிறிய கற்கோடரியின் நீளம் 5 செ.மீ., அகலம் கீழ்ப்பகுதியில் 5.5 செ.மீ., மேல்பகுதியில் 3 செ.மீ., தடிமன் 1.5 செ.மீ. அளவில் உள்ளது. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர். மரத்தாலான தடியில் கட்டி இதை ஆயுதமாகவும், பிறவற்றுக்கும் பயன்படுத்துவார்கள். புதிய கற்காலம் கி.மு.3000 முதல் கி.மு.1000 வரையிலானது. மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய இக்காலத்தில், வழுவழுப்பான கற்கருவிகள், கையாலும், சக்கரத்தாலும் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளான். 

 

இங்கு இரும்பு சார்ந்த பொருட்கள் உள்ளதால் இரும்பை உருக்கி பயன்படுத்த அறிந்திருந்தனர் எனலாம். நுண்கற்காலம், புதிய கற்காலக் கருவிகளோடு, பெருங்கற்கால முதுமக்கள் தாழிகளும் இங்கு உள்ளதால் நுண்கற்காலம் முதல் பெருங்கற்காலம் வரையிலான சுமார் 12,000 ஆண்டுகள் தொடர் வரலாற்றுச் சிறப்புடன் இவ்வூர் விளங்கி இருக்கிறது. இங்கு அகழாய்வு செய்து வரலாற்றை வெளிக்கொணர வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

 

சமீபத்தில் இதன் மேற்குப் பகுதியில் முதுமக்கள் தாழிகள், கல்திட்டைகளைத் தமிழ்நாடு தொல்லியல் துறை அடையாளம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.