Skip to main content

காலை வாரியதா? கல்லா கட்டியதா? - லத்தி விமர்சனம்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

Laththi Movie Review

 

இரும்புத்திரை படத்திற்கு பிறகு தொடர் தோல்வி படங்களாகவே கொடுத்து கொண்டிருக்கும் விஷால் வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரிலீஸ் செய்துள்ள லத்தி திரைப்படம் காலை வாரியதா? அல்லது கல்லா கட்டியதா?

 

போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருக்கும் விஷால் ஒரு பாலியல் கொடுமை கேசில் தப்பான நபரை தண்டித்ததற்காக வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். பின்பு சுனைனா உதவியோடு போலீஸ் டிஎஸ்பி பிரபுவின் ரெகமெண்டேஷனில் விஷாலுக்கு மீண்டும் வேலை கிடைக்கிறது. இதையடுத்து பணியில் இருந்து ஓய்வு பெறப் போகும் பிரபு வில்லன் ரமணாவை ஒரு கேசில் தண்டிப்பதற்காக விஷாலிடம் உதவி கேட்கிறார். லத்தி ஸ்பெஷலிஸ்ட் ஆன விஷால் பிரபுவின் ஆணைக்கிணங்க வில்லன் ரமணாவை லாடம் கட்டுகிறார். இதன்பின் பிரபு வெளிநாடு சென்றுவிட, வில்லன் குரூப் விஷாலை தண்டிக்க அவரை வலை வீசி தேடுகின்றனர். ஒரு கட்டத்தில் வில்லன் குரூப்பிடம் விஷாலும் அவரது மகனும் மாட்டிக் கொள்கின்றனர். இதை அடுத்து விஷால் அவர்களிடம் இருந்து தன் மகனைக் காப்பாற்றி தானும் தப்பித்தாரா, இல்லையா? என்பதை படத்தின் மீதி கதை.

 

நாம் ஏற்கனவே பார்த்து பழகிய அரதப்பழசான ஒரு கதையை கொஞ்சம் ஆங்காங்கே பட்டி டிங்கரிங் பார்த்து வேறு ஒரு வடிவத்தில் தற்போது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும்படி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் வினோத்குமார். முதல் பாதி குடும்பம், சென்டிமென்ட், திரில்லர், ஆக்‌ஷன் காட்சி என படம் சற்று சுவாரசியமாகவே நகர்கிறது. இடைவெளிக்குப் பிறகு ஒரே இடத்தில் படம் மாட்டிக்கொண்டு அங்கிருந்து வெளியே வர முயற்சி செய்து முடியாமல் அங்கேயே முடிந்து விடுகிறது. 

 

முதல் பாதி முழுவதும் சரியான கலவையில் சுவாரசியமான எலிமென்ட்ஸ்களை தொகுத்து கொடுத்த இயக்குநர் இரண்டாம் பாதியில் ஒரே ஒரு கட்டடத்திற்கு உள்ளேயே படம் முழுவதும் நடக்கும் படி செய்து அதில் சுவாரசியத்தை கொடுக்கத் தவறி இருக்கிறார். படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகளே அதிகமாக இருந்தது ஓரளவுக்கு மேல் நமக்கு சலிப்பு தட்டுகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் முழுவதும் வெறும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு நடுவில் வைத்துள்ள சென்டிமென்ட் காட்சிகள் ஏனோ அழுத்தம் இல்லாமல் நம்மை வந்தடைய மறுத்துள்ளது. 

 

அப்பா, மகன் சென்டிமென்ட் காட்சிகள் என்னதான் பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாக இருந்தாலும் அது நமக்கு மனதளவில் நெகிழ்ச்சியை கொடுக்காதது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. அதேபோல் சலிப்பை கொடுக்கும் அதீத ஆக்‌ஷன் காட்சிகளும், மனதில் ஒட்டாத சென்டிமென்ட் காட்சிகளும் படத்திற்கு பாதகமாக அமைந்து அயற்சியை கொடுத்துள்ளது. ஒரு கான்ஸ்டபிள் எப்படி வில்லன்களை எதிர்கொள்கிறார் என்ற ஓரளவு புதுமையான கதையை எடுத்துக் கொண்ட இயக்குநர், அதை அதேபோல் ஓரளவு புதுமையான திரைக்கதை மூலம் கொடுத்திருந்தால் இந்த படம் கரை சேர்ந்திருக்கும்.

 

ஆக்‌ஷன் காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகள் என தனக்கு கொடுத்த ஸ்பேஸில் புகுந்து விளையாடி இருக்கிறார் நடிகர் விஷால். ஆனால் கதை தேடல்களில் இன்னமும் கவனமாக இருந்திருக்கலாம். தான் மட்டுமே நன்றாக நடித்து நன்றாக ஆக்‌ஷன் காட்சிகளில் பர்ஃபாமன்ஸ் செய்தால் படம் ஓடிவிடும் என்று தப்பு கணக்கு போட்டு இருப்பது அவருக்கு இன்னொரு தோல்வியை கொடுத்திருக்கிறது. அவர் என்னதான் விழுந்து விழுந்து நடித்திருந்தாலும் ஒரு படமாக பார்க்கும் பொழுது அவை நம் மனதில் ஒட்ட மறுத்து இருப்பது படத்திற்கு பாதகமாக அமைந்திருக்கிறது. 

 

வழக்கமான கதாநாயகியாக வந்து சென்று இருக்கிறார் சுனைனா. படத்தில் இவருக்கான ஸ்பேஸ் மிகவும் குறைவு. தனக்கு கொடுத்த இடத்தை எந்த அளவு நிரப்ப முடியுமோ அதை செய்து விட்டு சென்றிருக்கிறார். விஷாலின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் சிறப்பான நடிப்பை மிக இயல்பாக வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் கிளைமாக்ஸ் காட்சிகளில் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் முனீஸ்காந்த், ஏ. வெங்கடேஷ், பிரபு, தலைவாசல் விஜய், ஆகியோர் அவரவருக்கான வேலையை செய்துள்ளனர். வில்லனாக மிரட்டி இருக்கும் ரமணா முகபாவனைகளிலேயே நம்மை மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். இவருக்கு அதிக வசனங்கள் இல்லை என்றாலும் நடை உடை பாவனைகள் மூலம் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். அதேபோல் அவரது அப்பாவாக நடித்திருக்கும் நடிகரும் வழக்கமான வில்லனாக வந்து மிரட்டி இருக்கிறார்.

 

பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவில் இரண்டாம் பாதியில் வரும் கட்டடம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஆக்‌ஷன் காட்சிகளும் ஓரளவு தரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சுமார், பின்னணி இசை நன்று. இப்படத்தை ஓரளவு ரசிக்க முடிவது என்றால் அது யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையால் மட்டுமே. வழக்கம்போல் எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு இசை தேவையோ அதை தரமாக கொடுத்து படத்தை கரை சேர்க்க முயற்சி செய்து உள்ளார்.

 

தொடர் தோல்வி படங்களை கொடுத்து வரும் விஷால் ஓரளவு பழைய கதையை தேர்ந்தெடுத்து அதில் கொஞ்சம் புதுமையான விஷயங்களை பட்டி டிங்கரிங் பார்த்து அதை புதிய வடிவத்தில் கொடுக்க முயற்சி செய்து ரிலீஸ் செய்துள்ள லத்தி திரைப்படமும் முந்தைய படங்களைப் போல் அவருக்கு காலை வாரி இருக்கிறது. கதை தேர்வில்  விஷாலுக்கு இன்னமும் கவனம் தேவை.

 

லத்தி - பவர் குறைவு!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆபாச வசனம் - விஜய்யைத் தொடர்ந்து விஷால்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
vishal rathnam trailer released

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 1 அன்று வெளியானது. பின்பு கடந்த மார்ச் 3, படத்தின் முதல் பாடலான ‘டோன்ட் ஓரி டோன்ட் ஒரிடா மச்சி’ பாடல் வெளியானது. அடுத்ததாக ‘எதனால’ பாடல் கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் பிரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.  அந்த வகையில் ரத்னம் படம் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையோர பகுதியில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. பிரியா பவானி ஷங்கருக்கு ஒரு ஆபத்து வருகிறது. அவரை காப்பாற்ற விஷால் முயற்சி எடுக்கிறார். எதனால் பிரியா பவானிக்கு பிரச்சனை வந்தது. விஷால் அவரை காப்பாற்றினாரா இல்லையா, விஷாலுக்கும் பிரியா பவானி ஷங்கருக்கும் என்ன தொடர்பு? ஆகியவற்றை விரிவாக விவரிக்கும் வகையில் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. மேலும் விஷால், சமுத்திரக்கனி, கௌதம் மேனன் ஆக்ரோஷமாக சர்ச்சைக்குரிய வசனங்களை பேசுகின்றனர்.
 
இந்த ட்ரைலரில் விஷால் பேசிய அதே வசனத்தை, கடந்த ஆண்டு வெளியான லியோ பட ட்ரைலரில் விஜய் பேசினார். அப்போது அந்த வசனத்திற்கு பெரும் சர்ச்சை கிளம்ப, பின்பு அதை திரையரங்குகளில் மியூட் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் விஷாலும் அதே வசனத்தை பேசியிருப்பது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!