Skip to main content

நாட்டை விட்டு வெளியேற பாஸ்போர்ட்டுக்காகக் காத்திருக்கும் மக்கள்! 

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

People waiting for passports to leave the country!

 

கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கையில் இருந்து வெளியேற மக்கள் முயன்று வருவதன் விளைவாக, பாஸ்போர்ட் விநியோகிக்கும் அலுவலகத்தில் மக்கள் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

இலங்கையில் கடந்தஆண்டு இதே காலகட்டத்தில் 91,331 பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்பட்டன. அதே, இந்தாண்டு முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 2,88,645 பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளனர். புதிய பாஸ்போர்ட்டுகளுக்கு ஒரு நாளில் மட்டும் குறைந்தபட்சம் 3,000 விண்ணப்பங்கள் வரும் நிலையில், பாஸ்போர்ட் பெற அவர்கள் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை மண்டல அலுவலகத்திலேயே காத்திருக்கிறார்கள். 

 

 

People waiting for passports to leave the country!

 

விண்ணப்பங்கள் குவிவதால், பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டு பெற மூன்று நாட்களாகக் காத்திருப்பதாக அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். 

 

திருகோணமலையில் இருந்து வந்து வரிசையில் மூன்று நாட்களாக காத்திருக்கும் 50 வயது பெண்மணி ஒருவர், குவைத்தில் வீட்டு வேலை செய்வதற்காக, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வந்ததாகக் கூறுகிறார். இவரைப் போல, தொழிலாளர்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் இலங்கையைவிட்டு வெளியேற, இரவு முழுவதும் அங்கேயே காத்திருக்கின்றனர். 

 

இலங்கையின் பண வீக்கம் 33% ஆக உயர்ந்துவிட்ட நிலையில், விலைவாசி உயர்வும், குடும்பத்தைப் பட்டினி போட முடியாத சூழலுமே நாட்டை விட்டு வெளியேறக் காரணம் என்கிறார்கள் இவர்கள். 


சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.