Skip to main content

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது - இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

Published on 06/03/2025 | Edited on 06/03/2025

 

14 pamban fishermen arrested by sri lankan navy

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் தற்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி மீனவர்கள் இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். அதோடு மீனவர்களின் ஒரு விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் 14 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிந்த பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்காலிகமாக அந்த போராட்டத்தை வாபஸ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்