Skip to main content

ஆடு திருடியதாக பள்ளி மாணவன் உட்பட மூவர் கைது!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

Three arrested for stealing goats

 

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருடிச் சென்ற 10ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட மூவரை  சிசிடிவி கேமரா உதவியோடு சமயபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும் திருடிய ஆடுகளையும், ஆடு திருட பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

சமயபுரம் அருகே பள்ளிவிடை பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பாபிள்ளை மகன் பரமசிவம் (57). இவர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். மதியம் 3 மணிக்கு ஆடுகளை அங்கேயே மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வீட்டிற்கு சென்று மதிய உணவு உண்டு விட்டு ஆடுகள் மேயும் இடத்திற்கு வந்துள்ளார் பரமசிவம்.  அங்கு வந்து பார்த்த போது தனது ஆடுகளில் இரண்டு ஆடுகளை காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்தார்.  இது குறித்து  பரமசிவம் சமயபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

 

புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது சிசிடிவி கேமராவில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் ஆடுகளை திருடி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்வது தெரிய வந்தது.

 

இதனை வைத்து சமயபுரம் நால்ரோடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, திருட்டில் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தில் இவர்கள் மூவரும் வந்துள்ளனர். போலிசார் அவர்களிடம் விசாரித்த போது, ஆடு திருடியதை ஒப்புக் கொண்டனர். ஆடு திருடிய சமயபுரம் டோல்கேட் பூக்கொல்லைப் பகுதியைச் சேர்ந்த செபஸ்டீன்ராஜ் மகன் ஹரிஹரன் (21). கூத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மதிக்கதக்க ஒருவரும், திருவள்ளுவர் அவின்யு பகுதியைச் சேர்ந்த 15 வயது மதிக்கதக்க ஒருவரும் என மூவரையும் கைது செய்தனர்.

 

மூவர் மீதும் திருட்டு வழக்கு பதிந்து கைது செய்த போலீசார் அவர்கள் திருடிச் சென்ற இரண்டு ஆடுகளையும், திருட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தினையும் சமயபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த ஆடுகளை உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்