Skip to main content

பாலியல் புகார் கொடுத்த மாணவிகள் மீது வழக்கு... மதுரை ஆட்சியரிடம் மாணவி தஞ்சம்!!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

INCIDENT IN MADURAI

 

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்க நின்றுகொண்டிருந்த அந்த மாணவி ''சார் தொலைதூரக் கல்வியில் கல்லூரி படிப்பைப் படிக்கிறேன். கரோனாவால் வீட்டில் சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டபட்ட நிலையில் ஏதாவது வேலைக்குச் சென்றால் கஷ்டம் நீங்கும் என்று எனக்குத் தெரிந்த தோழியிடம் உதவும்படி கேட்டேன். அவளும் பல்லடம் அருகில் உள்ள பிரபல ஆடை உற்பத்தித் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்த்துவிட்டாள். அங்கு தங்கி பணிபுரிந்து வந்தேன். அங்கு எனக்கு மேலதிகாரியான, எனது மேனேஜர் சிவக்குமார் என்னை அடிக்கடி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினார். நான் மறுக்கவே புகைப்படங்களில் மார்ஃபிங் செய்து என்னை மிரட்டி, ஆபாச வார்த்தைகள் பேசினார். பின்னர் நான் சொல்லும் இடத்திற்கு வந்தால் மட்டுமே உனது புகைப்படம் உனக்குக் கிடைக்கும் என்றும், இல்லையெனில் சோசியல் மீடியாவில் வெளியிட்டு உன்னை அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் என்னை மிரட்டினார்.

பின்னர், நன்கு யோசித்து அவர் சொன்ன இடத்திற்குச் சென்று படத்தை வாங்கி வரலாம் என்று முடிவுசெய்தேன். எனக்குத் துணையாக எனது தோழியும் வருவதாகக் கூறினார். இருவரும் அவரைச் சந்திக்கச் செல்வதற்கு முன், எங்களை தற்காத்துக் கொள்ளும் பொருட்டு பெப்பர் ஸ்ப்ரே, மிளகாய்த் தூள், கயிறு போன்ற சில பொருட்களை வாங்கி எனது பையில் வைத்துச் சென்றோம். பின்னர் அங்கு வந்த அவரிடம் புகைப்படத்தைத் தருமாறு கேட்டேன். நான் உன்னை மட்டும் தனியாகத் தானே வரச் சொன்னேன் என்று இருவருக்கும் இடையில் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது.

இந்தநிலையில், திடீரென்று எங்கள் மீது கைவைத்துத் தவறான முறையில் நடந்துகொண்டார். நாங்கள் எங்களை தற்காத்துக் கொள்ள கையில் வைத்திருந்த மிளகாய்த்தூளை முகத்தில் பூசி, கையையும் காலையும் கட்டி பின் பல்லடம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தோம். அங்கு வந்த காவல்துறையினர் நாங்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், சிவகுமாரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதற்குப் பின் எங்களையும் அன்றிரவு காவல் நிலைத்தில் வைத்து நடந்த விவரங்களை விசாரித்தனர். பின், அங்கு வந்த பெண் காவல்துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் கோமதி எங்களிடம் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். பின்னர், எனது தோழி ஒரு இஸ்லாமியப் பெண் என்பதால் அவளை, அவளது மதத்தை அசிங்கப்படுத்தும் வகையில் பேசியதோடு, கைநீட்டி அடித்து பின்னர் இரவில் பெண்கள் இருவரும் காவல் நிலையத்தில் தங்கக் கூடாது என்பதற்காக எங்களைக் காலையில் வரச்சொன்னார்கள்.

மறுநாள் காலையில் நாங்கள் சென்றபோது, எங்களை ஒரு அறைக்குள் அமரவைத்து எங்களிடம் துணை அதிகாரி சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் பிரபு விசாரணை நடத்தினார். பின்னர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்து இருப்பதாகச் சொல்லி எங்களிடம் புகார் காப்பியைக் கொடுத்தார்கள். அதில் நாங்கள் அளித்த புகாருக்குப் பதிலாக வேறு ஒரு புகார் நிரப்பப்பட்டிருந்தது. அதில் எங்களைக் கையொப்பமிடச் சொன்னார்கள். நாங்கள் படித்த பிறகு, இது நாங்கள் அளித்த புகார் இல்லை என்று கூற, எங்களை மிரட்டி அந்தப் படிவத்தில் கையொப்பமிடச் செய்தனர்.

பின்னர், எதுவுமே எழுதப்படாத காகிதத்தில் எங்கள் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டனர். அதன்பிறகு, தான் எங்களுக்கும் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தது தெரியவந்தது. பின்னர் நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் சென்று வாசலில் வைத்து, அவர் என்ன சொன்னாலும் சரி என்று தலையாட்ட வேண்டும் என்று மிரட்டினார்கள். பின்னர், எங்களிடம் நீதிபதியும் எதுவுமே முழுமையாக விசாரிக்காமல் எங்களை 15 நாட்களுக்கு காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

Ad


பின்னர், நானும் எனது தோழியும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தோம். 15 நாட்களுக்கு பல்லடம் காவல் நிலைத்தில் கையொப்பமிடச் சொன்னார்கள். நானும் முதல் இரண்டு நாள் கையப்பமிட்டேன். பின்னர் மூன்றாவது நாள் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் காது வலியால் இரத்தம் வடிந்ததால், சிறிது கால தாமதமாகச் சென்ற எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசி மற்றும் பணத்தைத்  தருகிறோம் என்று என்னை அழ வைத்துச் சித்திரவதைச் செய்தார்கள்.

பின்னர், என்னை சிவக்குமார் ஆள்வைத்து அடித்து என்னை காவல் நிலையத்திற்குச் செல்ல விடாமல் தடுத்தார். மேலும் எங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வருவதற்குக் கூட அச்சமாக இருக்கிறது. அதனால் எங்களை இந்த கொடுமையில் இருந்து காப்பாற்றும் படியும், எங்களை இத்தகைய கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் அனைவரின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை ஆட்சியரிடம் அடைக்கலம் கேட்டு வந்துள்ளோம். எனக்கும் என் தோழிக்கும் கொலை மிரட்டல் உள்ளது. எங்களைக் காப்பாற்றுங்கள்'' என்றார். அதற்கு கலெக்டர் ''இனி நீங்கள் கையெழுத்துப் போட காவல் நிலையம் செல்ல வேண்டாம். மேலும், தர்மபுரி ஆட்சியருக்குத் தகவல் கொடுத்துள்ளேன். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்'' என்று கூறிவுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.