Skip to main content

இளம்பெண்ணை அதிர்ச்சிக்குள்ளாக்கிய குறுஞ்செய்தி... ஹெல்மெட் இளைஞரை கைது செய்த போலீஸ்!

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

The text message that shocked the girl

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகரில் உள்ளது பெரியார் வீதி. இங்கு தேசிய வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று செயல்படுகிறது. இந்த மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சிறுமுளை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் மனைவி நர்மதா(21) என்பவர் சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கத் தெரியாமல் தடுமாறியுள்ளார். அப்போது ஹெல்மெட் அணிந்த இளைஞர் ஒருவர் அந்த ஏடிஎம் மையத்திற்குள் வந்துள்ளார். அவரிடம் நர்மதா தனது ஏடிஎம் கார்டைக் கொடுத்து பணம் எடுத்துத் தருமாறு கூறியுள்ளார்.

 

அந்த இளைஞரும் நர்மதா சொன்ன தொகையை அவரது ஏடிஎம் கார்டு பயன்படுத்தி எடுத்துக் கொடுத்துள்ளார். பணத்தையும் ஏடிஎம் கார்டையும் இளைஞரிடம் இருந்து வாங்கிக் கொண்டு வெளியே சென்ற அரை மணி நேரத்தில் நர்மதாவின் செல்போனுக்கு மேலும் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நர்மதாவிற்கு அப்போதுதான் தன்னிடம் அந்த இளைஞர் கொடுத்த ஏடிஎம் கார்டு தன்னுடையது இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

 

உடனடியாக நர்மதா திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நர்மதா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, சப் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் ஏடிஎம் மையத்தில் மோசடியாக பணம் எடுத்த நபரை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பெரியார் நகர் அருகே சந்தேகப்படும் அளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

 

அதில் அவர் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பதும் இவர்தான் நர்மதாவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். ஏடிஎம் மையத்தில் மோசடியாக பணம் எடுத்த இளைஞரை ஓரிரு நாட்களில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திட்டக்குடி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.