Skip to main content

கர்நாடகா அரசியலில் நொடிக்கு நொடி பரபரப்பு - நள்ளிரவில் வழக்கு விசாரணை!

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

 

 


கர்நாடகாவில் எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இன்று காலை கர்நாடகாவின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்கிறார்.

ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ்-மஜத கூட்டாக உச்சநீதிமன்றத்தில் நேற்று இரவு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவு 2 மணி முதல், விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்ஏ போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

இதுதொடர்பாக, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நடைபெற்ற வாதத்தின் போது மத்திய அரசின் வழக்கறிஞர் ரோஹத்கி தெரிவிக்கையில், 'காங்கிரஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆளுநரை அவரது பணியை செய்ய விடுங்கள். அவர் வேலைகளில் தலையிட வேண்டாம். ஆட்சியமைக்க அழைப்பது ஆளுநரின் கடமை. ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ எந்த நீதிமன்றத்துக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. ஆளுநர் கடமையாற்றுவதை தடுத்துவிட்டால், எந்த சட்டமும் இயற்றப்படாது என்றார்.

 

 

வாதத்தின் இடையே, 7 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், முகுல் ரோஹத்கி தெரிவித்தனர். சுமார் 4.30 மணியளவில் எடியூரப்பா பதவியேற்புக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி சிக்ரி கூறினார்.

நீதிபதி ஏ.கே.சிக்ரி வாய்மொழியாக கூறுகையில், எடியூரப்பாவின் பதவியேற்புக்கு தடைவிதிக்க முடியாது. அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அளித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார். இருப்பினும், நீதிபதிகள் இதுவரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. நாளை மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் கடிதங்களை நாளை காலை 10 மணிக்குள் எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும். மே 15ம் தேதி ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதத்தின் நகலை தாக்கல் செய்ய வேண்டும். பதவியேற்பு வழக்கு இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

"பாஜகவுக்கு எதிரான அலை" - சரத் பவார் 

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

nationalist congress cheif Sharad Pawar says anti bjp wave is sweeping

 

கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்தத் தேர்தல் முடிவானது வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

 

மேலும் இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தல் முடிவை பார்க்கும் போது மக்கள் மாற்றத்தை விரும்புவது தெரிகிறது. ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதால் நாட்டில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது. இதை சொல்வதற்கு ஜோதிடர் தேவை இல்லை. கர்நாடக தோல்வியை தொடர்ந்து மத்தியில் பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தும். மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன், மாநில சட்டமன்ற தேர்தல்களையும் சேர்த்து நடத்தும் திட்டம் குறித்து குழப்பி கொள்ள வாய்ப்பில்லை " எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

சட்டமன்றத்தில் தோல்வி; நாடாளுமன்றத்தில் கூட்டணி? - தேவகவுடா பதில்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

assembly election loss parliamentary election alliance devegowda answer 

 

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முதலில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. இருப்பினும் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாகவே எடியூரப்பா தனது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து  மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து முதல்வர் ஆனார்.

 

சுமார் ஒரு ஆண்டு காலம் ஆட்சி நடைபெற்ற நிலையில் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து பாஜகவானது  எடியூரப்பா தலைமையிலும், அவரைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை தலைமையிலும் ஆட்சி அமைத்து பாஜக ஆட்சிக் காலத்தை நிறைவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது.

 

மேலும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுற்றுள்ள நிலையில் அம்மாநிலம் உட்பட இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தேசியத் தலைவருமான தேவகவுடா, பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட முயற்சித்து வருவதாகச் சில கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

 

நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தோம். அதனை நம்பாமல் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்று சொல்லி வருகின்றனர். நாட்டில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காத கட்சி ஏதாவது உண்டு என்றால் தைரியமாக சொல்லட்டும் பார்க்கலாம். அதன் பின்னர் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேசலாம்" என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியும் உடன் இருந்தார்.