Skip to main content

 இலங்கை அகதிகள் அடிப்படை வசதிகளின்றி தவிப்பு! ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய்!!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

 

சேலத்தில், இலங்கை அகதிகள் முகாம்களில் குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் புலம்பெயர்ந்த தமிழர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

 

r

 

இலங்கையில் எல்டிடிஇ போராளிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே ஏற்பட்ட உள்நாட்டுப் போர்களின்போது, அங்குள்ள தமிழர்கள் ஏராளமானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். இலங்கையில் இருந்து இந்தியா வந்த அகதிகளுக்காக தமிழகம் முழுவதும் 110 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆரம்பத்தில் 3 லட்சம் அகதிகள் இருந்த நிலையில், பலர் சொந்த நாட்டுக்கு திரும்பிவிட்டனர். 

 

r


இப்போது, 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 65 ஆயிரம் பேர் முகாம்களில் வசித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் குறுக்குப்பட்டி, பவளத்தானூர், நாகியம்பட்டி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி (வடக்கு மற்றும் தெற்கு) ஆகிய இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன.


இந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்து அறிவதற்காக நாம் குறுக்குப்பட்டியில் உள்ள இரண்டு முகாம்களுக்குச் சென்றிருந்தோம். 


குறுக்குப்பட்டியில் அட்டை முகாம், ஓட்டுக்கூரை முகாம் என அருகருகே இரண்டு முகாம்கள் உள்ளன. இவற்றில் 350 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களில் பெரும்பாலனோர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே அகதிகளாக வசித்து வருகின்றனர். கால் நூற்றாண்டைக் கடந்த பின்னும், குடியிருக்க வீடு, உணவு, உடை ஆகியவற்றைக் கடந்து அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க வேறெந்த முன்னேற்றமும் இல்லை. 

 

r


இந்த முகாம்களில் குடிநீர் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூலம், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதனால் அகதிகள், வீடுகளில் உள்ள பெரிய டிரம்கள், குடங்களில் தண்ணீரைப் பிடித்து சேமித்து வைத்துக் கொள்கின்றனர். நீண்ட நாள்களாக சேமித்து வைக்கப்படும்போது, அதில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஈடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகின்றன. 


திடீரென்று சோதனைக்கு வரும் சுகாதாரத்துறை ஊழியர்கள், நாள் கணக்கில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் குடிநீரை தரையில் கவிழ்த்து விட்டுச் சென்று விடுகின்றனர். அவர்களின் இந்த செயல் சரியானதுதான் என்றாலும், 12 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யும்போது, குடிநீரை சேமித்து வைக்காமல் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்புகின்றனர் அகதிகள்.    


இந்த முகாமில் வசிக்கும் அகதிகள் சிலர் நம்மிடம் பேசினர்.


''எங்கள் நாட்டில் கழனியையும், சொத்துகளையும் விட்டுவிட்டுத்தான் இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்தோம். இனியும் எங்கள் நாட்டுக்குத் திரும்பப் போகும் உத்தேசமில்ல. ஆனாலும், இந்த முகாமிலும் எங்களுக்கு நல்ல சுகாதாரமான கழிப்பறை, சாலை வசதிகளோ இல்லை. பெண் பிள்ளைகளுக்காக ஒரு கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்காங்க. அதில் கதவுகள் எல்லாம் அரித்துக் கிடக்கின்றன. தண்ணீர் வசதியும் இல்லை. இதனால் பெண் பிள்ளைகள் மாதவிலக்கு காலத்தில் ரொம்பவும் அவதிப்படுகின்றனர்.


முகாமில் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டி வாறோம். காற்றில் குப்பைகள் பறக்கின்றன. பெண் பிள்ளைகள் சானிட்டரி நாப்கின்களை எரியூட்டப்படாமல் அப்படியே திறந்தவெளியில்தான் தூக்கி வீசுகின்றனர். இதற்கென குப்பைத் தொட்டிகளோ எரியூட்டிகளோ இல்லை. எப்போதாவது குப்பை லாரியை கொண்டு வந்து குப்பைகளை அள்ளிக்கிட்டு போகின்றனர். 

 

r


மாசத்துல ரெண்டு மூணு தடவைதான் குடிக்க தண்ணீர் திறந்து விடுகின்றனர். அதனால் பற்றாக்குறையை சமாளிக்க நாங்களே டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கெ £ண்டு வர்றோம். ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய்னு பிடிச்சிக்கிறோம். தண்ணீர் திறந்து விடுவதற்காக இந்த முகாமைச் சேர்ந்த ஜோதி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.  அவர் ஒவ்வொரு குடும்பமும் மாதம் 15 ரூபாய் கொடுத்தால்தான் தண்ணீர் திறந்து விடுவேன் என்கிறார். இந்த முகாமிற்கு வெளியே உள்ளூரைச் சேர்ந்த யார்  வீட்டிலாவது விசேஷம் என்றால், அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, அந்த குடும்பத்திற்கு மட்டும் தண்ணீர் திறந்து விடுகிறார். 


கனமழை பெய்தால் அப்படியே பல நாள்களுக்கு தண்ணீர் தேங்கிக் கிடக்கும். இதுவரைக்கும் தார் சாலை போடல. இன்னும் தெரு விளக்கு வசதி கூட தமிழக அரசு செய்து தரவில்லை. இதையெல்லாம் கியூ பிராஞ்ச், கலெக்டர்னு பலர்கிட்ட சொல்லி பார்த்துட்டோம். எந்த வசதிகளும் கிடைக்கல. 


தமிழ்நாட்டுக்குள் எந்த மூலையில் நரேந்திர மோடி வந்தாலும் இங்கேயும் கியூ பிராஞ்ச் போலீசார் சோதனை செய்கின்றனர். எங்கேயும் வெளியே செல்லக்கூடாதுனு தடை போடுகின்றனர். நாடு திரும்ப விரும்பாத அகதிகளுக்கு இந்திய அரசு, குடியுரிமை வழங்கினால் பரவால,'' என்கிறார்கள் குறுக்குப்பட்டி முகாம் அகதிகள். 


குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்போது, முகாமிற்கு வெளியே உள்ளூர் பஞ்சாயத்துக்குச் சொந்தமான பொது குடிநீர் குழாயில் அகதிகள் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். அங்கே மணிக்கணக்கில் காத்திருந்தால்தான் உள்ளூர் மக்கள் அகதிகளுக்கு நீர் பிடித்துச்செல்ல அனுமதிக்கின்றனர். நீண்ட நேரம் காத்திருப்பதைச் சுட்டிக்காட்டி  குடங்களை நீட்டினாலோ, 'எங்கிருந்தோ வந்த அகதி நாய்களுக்கு அவசரத்தை பாரு. அங்கேயே செத்துத் தொலைய வேண்டியதுதானே...' என்று உள்ளூர் மக்கள் சொல்லும்போது, தாங்கள் மீண்டும் மடிந்து போவதுபோல் இருக்கிறது என கண்ணீருடன் கூறினர். இத்தகைய வசவுச் சொற்களுக்கு குறுக்குப்பட்டி முகாம் பெண்கள் அனைவருமே பலமுறை ஆளாகி இருக்கின்றனர். 


குறுக்குப்பட்டி முகாம் மட்டுமின்றி, சேலத்தில் உள்ள அனைத்து முகாம்களிலும் இதேதான் நிலை. 


ஆண்களில் 80 சதவீதம் பேர் மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இங்கே, பி.இ., முடித்த இளைஞர்களும், கல்வியறிவே இல்லாத ஆண்களும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்குதான் செல்கின்றனர். அல்லது கட்டுமானத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். மிக மிகச்சொற்பமான இளைஞர்கள்தான் படித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் செல்கின்றனர்.


முகாமுக்கு தொடர்பில்லாத அந்நியர்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்படியே நுழைந்தாலும் கியூ பிராஞ்ச், வருவாய்த்துறையினர் மூலம் கடும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், உள்ளூர் கந்துவட்டிக்காரர்கள் மட்டும் எவ்வித தடையுமின்றி முகாமிற்கு உள்ளே வந்து செல்வதை நாம் பார்த்தோம். காவல்துறை அதிகாரிகளை கந்துவட்டிக்காரர்கள் 'சரிக்கட்டி' விடுவதால், அவர்களின் ராஜ்ஜியம் எல்லா முகாம்களிலும் பிசிரின்றி தொடர்கிறது. கிட்டத்தட்ட, அகதிகள் எல்லோருமே கந்துவட்டிக்காரர்கள் பிடியில் இருப்பதையும் காண முடிந்தது. 


சிலர், முதியோர் உதவித்தொகை கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை நேரில் மனு கொடுத்துவிட்டு, ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். ஆறுமுகம் (72) என்பவருக்கு இடது கை, இடது கால் வாதத்தால் செயலிழந்து உள்ளது. அவரோ, 'முதல்வர் சேலம் வந்திருந்தபோது இந்த முகாமில் உள்ள பலரும் உதவித்தொகைக்காக விண்ணப்பம் கொடுத்தோம். இன்னும் கிடைத்தபாடில்லை. அரசு கொடுக்கும் குடும்ப உதவித்தொகை, மாத்திரை மருந்து வாங்குவதற்குக்கூட போதவில்லை,'' என்று கண்ணீர் மல்கினார்.


இதுபற்றி, தமிழ்நாடு ஈழ அகதிகள் மறுவாழ்வு துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம்.


''சார்... ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் 3 லட்சம் அகதிகள் இருந்தனர். அவர்களில் சொந்த நாட்டுக்கு திரும்பியவர்கள் போக இன்று, 65 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் என்றைக்கு இருந்தாலும் சொந்த நாட்டுக்குப் போய்டுவாங்க. அதனாலதான் அகதி முகாம்களில் சாலை, தெருவிளக்கு வசதிகள் எல்லாம் அரசாங்கம் செய்து தருவதில்லை. அதுவும் இல்லாமல், தமிழ்நாட்டில் பல பஞ்சாயத்துகளில் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததும் முக்கிய காரணம். 


ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் சராசரியாக 3000 முதல் 4000 வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 20 கிலோ ரேஷன் அரிசி இலவசமாகவும், அதற்குமேல் 57 பைசா விலையில் அதிகபட்சமாக 28 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது. அகதி முகாம்களில் ஆண்களில் பெரும்பாலானோர் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். மதுவுக்கு செலவிடுவதில் கணிசமான தொகை செலவழித்தால் அவர்களே தெருவிளக்குகளை போட்டுக் கொள்ளலாமே? இத்தனைக்கும் அவர்களுக்கு மின்சாரம்கூட இலவசம்தான். அவர்களே நாலு பேர் சேர்ந்து வீட்டில் இருந்து வயர்களை இழுத்து தெருவிளக்கு போட்டுக்கொண்டால் நாங்கள் கேட்கவா போகிறோம்? 


முகாம்களில் வசிக்கும் அகதிகளிடம், 'நாம் தற்காலிகமானவர்கள்' என்ற மனநிலை இருக்கிறது. அதேநேரம், நிரந்தர குடிமக்களுக்கான வசதி வாய்ப்புகளைக் கேட்கும் ஆசையிலும் இருக்கிறார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் மூலம் கோரிக்கை மனு அளித்தால் எது எது அரசாங்கத்தால் முடியுமோ அதை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார், பெயர் கூற விரும்பாத அந்த அதிகாரி. 


நாகியம்பட்டி, பவளத்தானூர் முகாம்களில் பெண்கள், சிறுவர்கள் இன்றும் திறந்தவெளியைத்தான் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். 'தூய்மை இந்தியா' மற்றும் தனிநபர் கழிப்பறை குறித்து பெரிய அளவில் பரப்புரை மேற்கொள்ளும் இந்திய அரசு, அகதிகள் முகாம்களில் கொஞ்சமும் கவனம் செலுத்தவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது.


நாலாந்தர குடிமக்களை விடவும் அவல நிலையில் இருக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு கணக்குவழக்கு பார்க்காமல் இந்திய அரசும், தமிழக அரசும் தேவையான வசதிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்பதோடு, அவர்களிலும் படித்தவர்களுக்கு கவுரவமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பெண் அகதிகள் வீட்டில் இருந்தே சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித்தர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.