Skip to main content

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் கொன்றோம்! சேலம் மாற்றுத்திறனாளி கொலையில் பரபரப்பு பின்னணி!! 

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

Salem Physical disable person case police arrested one
                                                         அருணாச்சலம்

 

சேலம் அருகே, மாற்றுத்திறனாளி இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் கைதான வாலிபர், ஓரினச்சேர்க்கை உறவுக்கு மறுத்ததால் கல்லால் தாக்கியும், மதுபாட்டிலால் குத்தியும் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

 

சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் அ.நாட்டாமங்கலத்தைச் சேர்ந்தவர் மணி (எ) மணிகண்டன் (30). பிறவியிலேயே பேச்சு மற்றும் செவித்திறன் அற்ற மாற்றுத்திறனாளி. கட்டடத் தொழிலாளியான இவர், அக். 3ஆம் தேதியன்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை குள்ளம்பட்டி பிரிவு சாலையில் உள்ள சிறு கரட்டுப் பகுதியில் மணிகண்டன் மேல் சட்டை களையப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். 

 

இதுகுறித்து காரிப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து  தீவிரமாக விசாரித்தனர். மர்ம நபர்கள் அவரை தலையில் கல்லால் தாக்கியும், வயிற்றில் மது பாட்டிலால் குத்தியும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்தில் இருந்து ரத்தம் தோய்ந்த கல்லும், உடைந்த மது பாட்டிலும் கைப்பற்றப்பட்டன.  

 

சடலம், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரியவந்தது. 

 

சம்பவத்தன்று இரவு மணிகண்டன், மோட்டார் சைக்கிளில் வந்த இருவருடன் சென்றதாக அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர். அந்தத் தகவலின்பேரில் விசாரணை நடத்தியதில், இச்சம்பவத்தில் குள்ளம்பட்டி அருகே உள்ள பள்ளக்காட்டைச் சேர்ந்த அருணாச்சலம் (25), திருமலை (22) ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களும் வீட்டில் இல்லாமல் திடீரென்று தலைமறைவாகிவிட்டது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் அக். 4ஆம் தேதி இரவு, அருணாச்சலத்தை சந்தேகத்தின்பேரில் பிடித்த காவல்துறையினர், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் நம்மிடம் பேசியது...

 

கொலையுண்ட மணிகண்டன், வேலைக்குச் சென்றுவிட்டு தினமும் இரவு மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மணிகண்டன் வீட்டிலிருந்து குள்ளம்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். 

 

அப்போது அந்த வழியாக அருணாச்சலமும், திருமலையும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அவர்களைப் பார்த்த மணிகண்டன், அவர்களிடம் லிஃப்ட் கேட்டு அவர்களுடன் வண்டியில் ஏறிக்கொண்டார். மூவரும் டாஸ்மாக் சென்று அங்கே மதுபானங்களை வாங்கிக்கொண்டு, அப்பகுதியில் உள்ள கரட்டுப் பகுதியில் அமர்ந்து ஒன்றாக மது குடித்துள்ளனர். 

 

போதை உச்சத்தில் இருந்த நிலையில், திடீரென்று மணிகண்டனுடன் ஓரினச்சேர்க்கை உறவு வைத்துக்கொள்ள திருமலை முயற்சித்துள்ளார். இதற்கு மணிகண்டன் மறுத்ததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட மோதலில், அவர்கள் இருவரும் மணிகண்டனின் தலையில் கல்லைப் போட்டும், வயிற்றில் மது பாட்டிலால் குத்தியும் கொலை செய்துள்ளனர். மது அருந்துபவர்கள், அந்த இடத்திற்கு மது குடிக்க வருவார்கள் என்பதால், கொலை செய்த பிறகு இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். பேச்சு மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளி என்பதால் மணிகண்டனால் கத்தி கூச்சல் போடமுடியவில்லை. 

 

இதையடுத்து, அருணாச்சலத்தை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, ஆத்தூர் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள திருமலையைத் தேடிவருகின்றனர். இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்குகளும் விசாரணையில் உள்ளன. இந்த சம்பவம் குள்ளம்பட்டி, அ.நாட்டாமங்கலம் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“ஹத்ராஸில் நடந்தது விபத்து அல்ல; கொலை” - வெளியான பரபரப்பு தகவல் 

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Boleh Bala lawyer said that the masked gang was involved in Hathras incident

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் கடந்த 2ஆம் தேதி ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றிய பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிகழ்ச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் என  121 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இதனிடையே, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக கூட்டத்தை நடத்திய சாமியார் போலே பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தப்பித்து ஓடிய சாமியார் போலே பாலாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  

இதனிடையே வீடியோ வாயிலாக பேசிய சாமியார் போலே பாலா, “இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த வலியைத் தாங்கும் சக்தியை கடவுள் எங்களுக்குத் தரட்டும். தயவுசெய்து அரசாங்கம் மற்றும் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். குழப்பத்தை உருவாக்கிய எவரும் தப்பிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் ஏ.பி. சிங் மூலம், கமிட்டியின் உறுப்பினர்களை இழந்து தவிக்கும் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன் நின்று அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

இது குறித்து பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “இது விபத்தோ, சதி திட்டமோ எதுவாக இருந்தாலும் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டு இந்த சம்பவத்திற்கு பின்னால் யார் இருந்தாலும் அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும்” என்றார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சாமியார் போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி. சிங், “சாமியார் போலே பாலாவின் பேச்சைக் கேட்க நிறைய பேர் வந்திருந்தனர். அதில் முகங்களை மறைத்தப்படி முகமூடி அணிந்தப்படி கூட்டத்திற்குள் 15 முதல் 16 நபர்கள் வந்திருந்தாக, நேரில் பார்த்தவர்கள் என்னிடம் கூறினார்கள். முகமூடி அணிந்த நபர்கள் கூட்டத்திற்கு வரும் போது கையில் விஷக்கேனை கொண்டு வந்து, பின்பு அதனைக் கூட்டத்தில் வைத்து திடீரென திறந்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை பார்த்தேன். அவர்கள் யாரும் காயப்பட்டு உயிரிழக்கவில்லை; மூச்சுத் திணறல் காரணமாகவே உயிரிழந்துள்ளனர். அவர்களின் பணியை செய்துவிட்டு தப்பித்து செல்ல வசதியாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதனையும் சமர்ப்பிப்போம். இந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரிக்க வேண்டும். இது விபத்து அல்ல; கொலை” என்று தெரிவித்துள்ளார்.  

Next Story

ரத யாத்திரை; ஈசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Ratha Yatra Heavy traffic in ECR

ரத யாத்திரையால் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இஸ்கான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 44வது ஆண்டு விழாவாகப் பூரி ஜெகநாதர் ரத யாத்திரை இன்று (07.07.2024) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மதியம் 03.30 மணி அளவில் பலவாக்கத்தில் ரத யாத்திரை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் காரணமாகக் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை விரைந்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகப்படியான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடியதால் கிழக்கு கடற்கரைச் சாலை கடும் போக்குவரத்து நெரிசல் செயல்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.