Skip to main content

ஆண்டாள் யானை காலால் மிதித்ததில் பாகன் உடல் நசுங்கி பலி!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

சேலம் வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண்டாள் யானை காலால் மிதித்ததில் பாகன் உடல் நசுங்கி பலியானார். மருத்துவ பரிசோதனை செய்ய முயன்ற கால்நடை மருத்துவர் காயங்களுடன் உயிர் தப்பினார். 


மதுரை கள்ளழகர் கோயில் யானை ஆண்டாள். வயது முதிர்வு, உடல்நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக கடந்த 2009ம் ஆண்டு முதல் சேலம் ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. பாகன் காளியப்பன் அந்த யானையை பராமரித்து வந்தார். 


ஆண்டாள் யானை, ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத 'பேடி' வகையைச் சேர்ந்தது. இந்த யானையை திங்கள்கிழமை (டிச. 2, 2019) மாலை 5 மணியளவில், கால்நடை மருத்துவர் பிரகாஷ் என்பவர், யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அதன் அருகே சென்றார். அப்போது ஆவேசமாக இருந்த யானை, மருத்துவரையும், பாகனையும் தாக்கியுள்ளது. இதில், யானையின் கால்களுக்கு இடையே பாகன் சிக்கிக் கொண்டதால் அவரை மிதித்துக் கொன்றது. 

salem andal elephant incident fagan forest department investigation


மருத்துவர் பிரகாஷ், லேசான காயத்துடன் அங்கிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி உயிர் பிழைத்தார். அதன்பிறகும் ஆண்டாள் யானை தொடர்ந்து ஆக்ரோஷமாக இருந்ததால், அதற்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி மயக்கமடையச் செய்து அதனை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து, ஏற்காடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து, யானை மிதித்ததில் சிதைந்த நிலையில் காணப்பட்ட பாகன் காளியப்பனின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


யானை ஆண்டாள், கடந்த 2013ம் ஆண்டு குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா துப்புரவு ஊழியர் பத்மினி என்பவரை தாக்கிக் கொன்றது. தற்போது பாகன் காளியப்பனை தாக்கிக் கொன்றுள்ளது. இச்சம்பவம் குறித்து ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 


இச்சம்பவம் குறித்து வன அதிகாரி பெரியசாமியிடம் கேட்டோம்.


சேலத்தில் யானை பாகன் காளியப்பனை ஆண்டாள் யானை காலால் மிதித்துக் கொன்றுள்ளது. இந்த யானை ஏற்கனவே மூன்று பேரை மதுரை கோயிலில் இருந்தபோது காலால் மிதித்துக் கொன்றுள்ளது. அதன்பிறகுதான் அதன் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மதுரை அழகர் கோயிலில் இருந்து சேலம், ஊயிரியல் பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டது. இங்கு வந்த பிறகும் கடந்த 2013ல் துப்புரவு ஊழியர் ஒருவரை கொன்றுள்ளது.


இதனால் யானையின் உடல்நிலையை மூன்று மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்து வருகிறோம். இந்த நிலையில், இன்று (திங்கள் கிழமை) மருத்துவர் பிரகாஷ் யானையை பரிசோதனை செய்ய வந்தபோது அவரையும், பாகனையும் தாக்கியுள்ளது. இந்த யானையை இனியும் சேலம் உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிப்பது என்பது ஆபத்தானது. அதனால் இங்கிருந்து வேறு முகாமிற்கு மாற்ற திட்டமிட்டு இருந்த நிலையில், இப்போது இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. யானை தாக்கி இறந்த பாகன் காளியப்பன் குடும்பத்திற்கு அரசு, இழப்பீடு வழங்க உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறோம். இவ்வாறு வனத்துறை அதிகாரி பெரியசாமி கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.