Skip to main content

ஊரடங்கால் ஏற்றுமதி செய்ய முடியாமல் மழையில் நனையும் மண் குதிரைகள்!!! மன வேதனையில் மண்பாண்ட கலைஞா்கள்!!

Published on 11/06/2020 | Edited on 12/06/2020
pudukottai craft


புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையூர், செரியலூா், வலத்தக்காடு, துவரடிமனை உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள மண்பாண்ட கலைஞர்கள் ஊருக்காக மண் தொட்டிகள், குதிர்கள், அய்யனார் கோயில்களுக்கு களிமண் குதிரைகள், நாய், காளை, சுவாமி சிலைகள் செய்த காலம் மாறி உலகுக்கே களிமண் பொம்மைகள், சிலைகள் செய்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பலரும் பிற நாடுகளுக்கே சென்று களிமண் சிலைகள், பொம்மைகள் செய்து சாதித்துள்ளனர். இந்தியாவில் அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட பல நகரங்களிலும் இவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட களிமண் பொம்மைகள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.


இப்படி பல்வேறு இடங்களில் இவர்களின் கைவண்ணத்தைப் பார்க்கும் மண் சிற்பங்கள், சிலைகள், பொம்மைகள் மீது ஆர்வமும், ஆசையும் கொண்டவர்கள் தங்கள் வீடுகளில் அழகிற்காக வைத்துக் கொள்ள களிமண் சிலைகளை செய்ய சொல்லி வாங்கிச் செல்கின்றனர்.

இப்படித்தான் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண்மணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அறந்தாங்கி அருகில் உள்ள மரமந்தூர் வலத்தக்காடு கிராமத்தை சேர்ந்த, பல நாடுகளுக்கும் சென்று கலைப் பொருட்கள் செய்து சாதித்த டெரகோட்ட தங்கையாவின் கை வண்ணத்தைப் பார்த்து தனது வீட்டில், தோட்டத்தில் வைக்க உயரமான குதிரை சிலைகள் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்துள்ளார். அந்த பெண்மணிக்காக தங்கையா களிமண்சிலை செய்யும் பல கலைஞர்களை அழைத்து வந்து இரவு பகலாக 9 அடி உயரத்தில் 10 க்கும் மேற்பட்ட களிமண் குதிரை சிலைகளை செய்து சூலையில் வைத்து வேகவைத்து பெங்களூருக்கு லாரியில் ஏற்றி அனுப்ப இருந்த நேரத்தில் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த 3 மாதங்களாக அந்த களிமண் குதிரைகள் தேங்கியுள்ளது.

 

 

pudukottai craft


சிறிய வீட்டில் வைக்கவும் வசதி இன்றி, வீட்டு வாசலில் வைத்து அதற்கு பந்தல் அமைக்கக்கூட வழியின்றி மழையிலும் வெயிலிலும் நனைந்து வருகிறது. மேலும் குதிரை சிலைகள் செய்ய வெளியூர்களில் இருந்து அழைத்துவரப்பட்ட கலைஞர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்குகூட சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார் தங்கையா.


இது குறித்து தங்கையா கூறும் போது.. நான் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று பல்வேறு சிலைகள் செய்து கொடுத்திருக்கிறேன். என்னைப் போலவே மற்றும் பலர் பல நாடுகளுக்கும் சென்றுள்ளனர். எங்கள் வேலைகளைப் பார்த்து ஆர்டர்கள் கொடுக்கிறார்கள். ஆனால் ஆண்டு முழுவதும் வேலை கிடைப்பதில்லை. அதனால் தற்போதைய இளைஞர்கள் இந்த தொழிலைவிட்டு மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

எங்களுடைய களிமண் சிலைகள் வலுவாகவும், அழகாகவும் இருக்கும் அதனால்தான் எங்களை அழைக்கிறார்கள். பல பொருட்காட்சிகளில் எங்கள் சிற்பங்கள் இடம் பெறும். தற்போது பெங்களூருக்கு குதிரை சிலைகள் கேட்டார்கள். அவசரமாக பலரையும் சம்பளத்திற்கு அழைத்து வந்த சிலைகளை செய்து முடித்தபோது கரோனா ஊரடங்கு வந்துவிட்டது. அதனால் அப்படியே முடங்கியுள்ளது. பந்தல் அமைக்க கூட வசதி இல்லை. அதனால் இப்படி வெளியில் வைத்திருக்கிறோம். சிறப்பு அனுமதி கிடைத்தால் உடனே சிலைகளை அனுப்பி வைக்கலாம். அல்லது ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகே அனுப்ப வேண்டும் என்றார்.

 

nakkheeran app




மேலும் பல கலைஞர்கள் கூறும் போது.. இந்த நேரத்தில் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. சின்ன, சின்ன வேலைகள் செய்தாலும் அதை ஊருக்குள் கொண்டு போய் விற்க முடியவில்லை. அதனால் ஒவ்வொரு மண்பாண்ட தொழிலாளர்களின் குடும்பமும் வறுமையில் வாடுகிறது. அரசு நிவாரணமும் ஒரு சிலருக்கே கிடைத்திருக்கிறது, மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் ஒவ்வொரு மண்பாண்ட கலைஞர்களுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க உதவி செய்ய வேண்டும். எங்களைப் போன்ற நலிவுற்ற கலைஞர்களுக்கு போதிய நவீன கருவிகள் விலையில்லாமல் வழங்குவதுடன் களி மண் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றனர். மேலும் களிமண் சிலைகள் செய்வதை கல்லூரிகளில் பாடமாக வைத்து அனுபவமுள்ள கலைஞர்களை பயிற்சி கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.