
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டவெள்ள பாதிப்புகளை தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தூத்துக்குடி மாவட்டம் கோரப்பள்ளம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 750 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
போர்க்கால அடிப்படையில் இவற்றை சரி செய்ய நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளை சேதங்களை கணக்கெடுக்கும் பணி இரண்டு மூன்று நாட்களில் முடிவடையும். அதன் பிறகு நிவாரணம் வழங்கும் பணிகள் தொடங்கும். கோரப்பள்ளம் ஏரி உடைப்பு இன்று மாலைக்குள் அல்லது இரவுக்குள் சரி போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்படும்.
அத்தனை ஏரிகளில் ஏற்பட்டு உடைப்புகளும் சரி செய்யப்பட்டு நீர் சேகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் விவசாயத்திற்கு கொடுக்கப்படும். இதேபோல் மற்ற துறைகளிலும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாக துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் போர்க்கால அடிப்படையில் பணிகளை செய்து கொண்டிருக்கிறது' என்றார்.