Skip to main content

உரிமையாளரைக் கடத்தி சொத்து அபகரிப்பு முயற்சி; அரசியல் கட்சிப் பிரமுகர் உட்பட 4 பேர் கைது

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

person interest seize the property

 

சிதம்பரத்தில் வீட்டு உரிமையாளரை காரில் கடத்தி சொத்தை அபகரிக்க முயற்சி செய்ததாக முக்கியக் கட்சிப் பிரமுகர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

 

தஞ்சை மாவட்டம், வடக்கு மாங்குடியைச் சேர்ந்தவர் காஜாமைதீன் (52). சென்னையில் குடியிருந்து வருகிறார். இவர் சிதம்பரம் வடக்கு ரத வீதியில் வசித்து வரும் ஜமாலுதீன் என்பவருக்கு சொந்தமான வீட்டைக் கடந்த 2017-ம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர் வீட்டை ஜமாலுதின் கட்டுப்பாட்டில் விட்டு வாடகையை வசூல் செய்யச் சொல்லிவிட்டு காஜாமைதீன் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்.

 

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியா வந்த காஜாமைதீன், ஜமாலுதீனிடம் பாக்கி இருந்த வாடகைப் பணத்தையும், வீட்டையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாலுதீன் சென்னைக்குச் சென்று காஜாமைதீனிடம் பணம் தருவதாகவும் அந்த வீட்டைத் தனக்கு தருமாறும் கேட்டுள்ளார். ஆனால், காஜாமைதீன் மறுத்து விட்டார்.

 

person interest seize the property

 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஜமாலுதீன், காஜாமைதீனை காரில் கடத்தி வந்து சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் ஒரு இடத்தில் அடைத்துள்ளார்.  இதனையடுத்து காஜாமைதீன் செல்போன் மூலம் தனது மனைவி மற்றும் நண்பர் குமாருக்கு, தான் கடத்தப்பட்டிருப்பது குறித்து தெரிவித்துள்ளார். இதன் பேரில், காஜாமைதீனின் நண்பர் குமார் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்குப் புகார் செய்தார். அதன் பேரில் சென்னை நீலாங்கரை காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். பின்னர் இந்த வழக்கு சிதம்பரம் நகர காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது.


இது தொடர்பாக, சம்பவத்திற்குத் துணையாக இருந்த ஜமாலுதீன், முகமதுரபீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், விஜயபாஸ்கர், செந்தில், நடனம், நடராஜ், ரவீந்திரன், பாலச்சந்திரன் உள்பட 9 பேர் மீது புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இவர்களில் செல்லப்பன்(49), சிதம்பரம் கே.கே.சி பிள்ளை தெருவை சேர்ந்த ஜமாலுதீன்(49), சிதம்பரம் ஓமகுளம் விஜயபாஸ்கர்(38), சிதம்பரம் லால்புரம் ரவீந்திரன்(31) ஆகிய நான்கு பேரை சிதம்பரம் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் செல்லப்பனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.