Skip to main content

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

kjl

 

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். அதன்படி சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், கரூரில் 20 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. இவர் கடந்த தேர்தலில் அமைச்சர் செந்தில் பாலாஜியை எதிர்த்து கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது விசாரணை மேற்கொள்ள ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன?” - ஜோதிமணி எம்.பி.

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Jothimani M.P says What is the mystery behind the Governor's denial of permission to investigate M.R.Vijayabaskar?

 

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். அவரது பதவிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு, ஊழல் வழக்கு உள்ளிட்ட வழக்குகளை எதிர்கொண்டிருந்தார். இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் தற்போதைய தமிழக அரசு கோப்புகளை அனுப்பி இருந்தது. ஆனால், இதுவரையிலும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் தரவில்லை.

 

இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்ய கடந்த மார்ச் மாதம் அனுமதி கோரிய நிலையில், அதற்கும் இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளுக்கு அரசு உரிய விளக்கத்துடன் மீண்டும் அனுப்பி வைத்தபோதும் ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்  கடந்த 20 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ‘முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா மீதான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டது. எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான கோப்பு ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான விசாரணை கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காதது குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அதிமுகவின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அனுமதி கேட்டபோது கோப்புகள் வரவில்லை என்று கூறிவிட்டு தற்போது வந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். ஒரு ஆளுநர் இவ்வளவு அப்பட்டமாக பொய் சொல்வதன் அவசியம் என்ன? இதில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா மீதான கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது விசாரணை மேற்கொள்ள ஆளுநர் அனுமதி தர மறுக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன?

 

இந்த மர்மத்துக்குப் பின்னால் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்று கேள்வி கேட்க வேண்டியுள்ளது. கரூரில் மட்டும் அதிமுகவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நல்ல உறவு இருப்பது போல தோன்றுகிறது. தமிழகம் முழுவதும் பல டீலிங் நடத்தும் வசூல் ராஜாவாக அண்ணாமலை இருக்கிறார். இதேபோன்ற டீலிங்கில் தான் விஜயபாஸ்கருக்கும் ஆளுநருக்கும் இடையே அண்ணாமலை இருந்துள்ளாரா? என்ற கேள்வியும் எழுகிறது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதற்கு பின்னால் இருக்கும் டீலிங் என்ன என்பதை விளக்க வேண்டும்” என்று கூறினார். 

 

 

Next Story

“தமிழகம் போதைப் பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறி வருகிறது” - எம்.ஆர். விஜயபாஸ்கர்

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

Former AIADMK minister MR Vijayabaskar alleges against DMK government

 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

 

எம்ஜிஆர் உருவாக்கிய போது 18 லட்சம் அதிமுக உறுப்பினர்கள். ஜெயலலிதா வந்தவுடன் ஒரு கோடியே 54 லட்சம் உறுப்பினர்கள். எடப்பாடி பழனிசாமி வந்தவுடன் 2 கோடியே 20 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக அஇஅதிமுக மாறியுள்ளது. இந்திய அளவில் தேசியக் கட்சிகளுக்கு இணையாக இருக்கும் ஒரு கட்சி என்றால் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்தான். இன்றைக்கு இருக்கும் திமுக அரசு பொய்யை மட்டுமே சொல்லி தேர்தலின் போது வாக்குறுதி அளித்தனர். அப்பா, மகன், மகள் என பொய்களைச் சொல்லி ஒருவர் 75 சதவீதம், மற்றொருவர் 90 சதவீதம் என பொய்யைச் சொல்லி மட்டுமே வாக்குகள் சேகரித்தனர்.

 

ஆனால் தேர்தலின் போது சொன்ன 5 சதவீதத்தை நிறைவேற்றினால் போதும்; அதைக்கூட நிறைவேற்ற முடியாத திமுக அரசு மகளிர்க்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் என அறிவித்துவிட்டு பாதி பேருக்கு மட்டும் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. 

 

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் முதியோர்களுக்கும் விதவைகளுக்கும் தொகை வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அதுபோன்று முதியோர் உதவித் தொகை மற்றும் விதவைகள் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் அதிமுக ஆட்சியில் ஒரு பெண் மரணம் அடைந்ததை அரசியல் செய்த திமுகவினர், இந்த ஆண்டு மட்டும் 12 பேர் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்டனர். தற்பொழுது அவர்கள் ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசு தான் இந்த திமுக அரசு.

 

குட்கா பொருட்களை விற்கக் கூடாது என சட்டம் கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக ஆட்சியில் குட்கா பொருட்களை தமிழகம் முழுவதும் விற்பனை செய்தவர் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த திமுகவில் உள்ள கொங்கு மெஸ் மணி. இவரது வீட்டு அருகில் 14 டன் குட்கா பறிமுதல் செய்து அவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்தது அதிமுக அரசு. ஆனால் தற்பொழுது இருக்கும்  திமுக ஆட்சியில் கஞ்சா, குட்கா போன்ற பொருட்களை பறிமுதல் செய்ததாக டிஜிபிஏ சொல்லி உள்ளார். சாராயம் கஞ்சா தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் விற்கப்படுகிறது. தமிழகம் போதைப் பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறி வருகிறது” என்றார்.