Skip to main content

“இது ஒரு நல்ல சூழல்... விரைவில் பிரபாகரன் வெளிப்படுவார்” - பழ. நெடுமாறன் உறுதி 

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

pazha nedumaran press meet

 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்பதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் அவர் வெளியில் வருவார் என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

 

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்பதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட ஐயம் இருக்கும் இந்த செய்தியில் தற்போது இது உறுதியாக இருக்கும் என்பதை நம்புகிறேன். அவர் விரைவில் தமிழீழம் பற்றி விரிவான திட்டத்தை அறிவிக்க இருக்கிறார். உலகத்தில் உள்ள தமிழர்கள் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். பிரபாகரன் அவர்கள் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பு மூலம் நான் அறிந்த செய்தியை அவர்கள் அனுமதியுடன் தற்போது தெரிவித்திருக்கிறேன்.

 

எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என்பது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்களுக்கும் ஆவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் விரைவில் அவர் வெளிப்படுவார். அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். இந்த செய்தி ஈழத் தமிழர்களுக்கு நன்மையும் கொடுக்கும். நம்பிக்கையும் கொடுக்கும்.  சர்வதேச சூழல் அன்று கை விரித்தது ராஜபக்சேவை ஆட்சியில் அமர வைத்த அதே சிங்கள மக்கள் அவரை தற்போது நாட்டை விட்டு விரட்டி இருக்கிறார்கள். இதைவிட நல்ல சூழல் எதுவாக இருக்க முடியும். இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவிற்கு எதிராக சீனா செயல்படுகிறது. இதனை தடுக்க முற்பட வேண்டும். இந்த சூழ்நிலையில் இந்திய மக்களுக்கு ஆதரவாக ஈழத் தமிழர்கள் இருப்பார்கள்” எனத் தெரிவித்தார்

 

 

சார்ந்த செய்திகள்