![Notification of 'TED' Exam for filling vacancies in Government Schools, Colleges](http://image.nakkheeran.in/cdn/farfuture/z5Wj8hs_DCja0vmzHxukURI8GQxjJ5lOiK_liE65X9k/1657086945/sites/default/files/inline-images/16_34.jpg)
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள 10,371 ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 01/2022, நாள் 07/03/2022 அன்று வெளியிடப்பட்டது. அதில் இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 14.03.2022 முதல் பதிவேற்றம் செய்திடலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 26.04.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் கணினி வழி தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது ஆகஸ்டு 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- 1க்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை செப்டம்பரில் வெளியிடப்பட்டு டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.