Skip to main content

சாமியாரை அடித்துக் கொன்று புதைத்த சம்பவம்; 4 பேர் கைது

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
The incident where the preacher was beaten to buried; 4 arrested

வேலூரில் சாமியாரை ஐந்து பேர் அடித்துக் கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள மலையடிவாரத்தில் உள்ள வள்ளிமலைக் கிராமத்தில் விவசாய நிலத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாமியார் ரவி(65) என்பவர், குடிசை கட்டி வசித்து வந்தார்.

இந்நிலையில் சாமியார் ரவி, மணல் கடத்தல், கஞ்சா விற்பனை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசாருக்கு அவ்வப்போது துப்புக்கொடுத்து வந்ததாகவும், இதனால் சமூக விரோதிகள், சாமியாரை கொலை செய்து சடலத்தை புதைத்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில்  செய்தி பரவியது.

இதையறிந்த மேல்பாடி போலீசார் வள்ளிமலையில், சாமியாரின் சடலம் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தைக்  கண்டறிந்தனர்.  டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் அன்பரசி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் வள்ளிமலைப் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(40), சின்ன வள்ளிமலையைச் சேர்ந்த மதன்குமார்(36), மேல்பாடியைச் சேர்ந்த லோகேஷ்(34), வள்ளிமலையை சேர்ந்த பிரபு(31) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். அதில், சாமியார் ரவியை அடித்துக் கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அரி கிருஷ்ணன், மதன்குமார். லோகேஷ்குமார், பிரபு ஆகிய 4 பேரை இன்று கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், சாமியார் ரவி தங்கியுள்ள குடிசையின் பக்கத்தில் ஹரிகிருஷ்ணனுக்கு சொந்தமான நிலம் உள்ளது. கடந்த வாரம் நிலத்திற்கு வந்த ஹரிகிருஷ்ணனின் செல்போன் காணாமல் போனது. இதனை சாமியார் ரவி எடுத்திருக்கலாம் எனச் சந்தேகப்பட்டு ஹரிகிருஷ்ணன், அவரது நண்பர்கள் மதன்குமார், லோகேஷ், பிரபு மற்றும் திருமலை ஆகிய 5 பேரும் சென்று அவரை கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 5 பேரும், ரவியை அடித்து கீழே தள்ளியுள்ளனர், இதில் அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். அதை மறைக்க அவரது சடலத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர், இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்து புதைக்கப்பட்ட சாமியார் ரவியின் சடலம் தடயவியல் நிபுணர்கள், தாசில்தார் சரவணன் ஆகியோர் முன்னிலையில்  தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அங்கேயே புதைக்கப்பட்டது. இந்தக் கொலையில் தொடர்புடைய வள்ளிமலையைச் சேர்ந்த திருமலை(32) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை; பெற்றோர் குற்றச்சாட்டு

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Student incident in private college hostel; Accusation of parents

திருச்சியில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இந்த உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல் பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் தெருவைச் சேர்ந்த அமமுக நகர செயலாளர் பாலாஜியின் மகள் தாரணி (வயது 19) விடுதியில் தங்கி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தாரணி காய்ச்சல் காரணமாக நேற்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடுதிக்கு சென்றுள்ளார். மேலும் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் தங்கியுள்ளார். தாரணி காய்ச்சல் குறித்து பேராசிரியரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் விடுமுறை எடுக்கக்கூடாது நிர்வாகத்திடம் கேட்டு தான் விடுமுறை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் தாரணி விடுதியிலேயே தங்கி உள்ளார். விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகள் கல்லூரிக்கு சென்று மீண்டும் விடுதிக்கு வந்தபோது அறை உள்புறம் தாழ்பாள் போடப்பட்டு இருந்ததால் இது குறித்து விடுதி சக மாணவிகள் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதன்படி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னலில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக கூறி அவரை படுக்கையில் வைத்திருந்தனர்.

மேலும் இறந்த தாரணியை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் தாரணிக்கு காய்ச்சல் காரணமாக தந்தை பாலாஜியிடம் தொலைபேசியில் மதியம் 12 மணி அளவில்  தொடர்பு கொண்டு காய்ச்சலால் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தாரணி தெரிவித்துள்ளார். இதனால் நேற்று மதியம் 3 மணி அளவில் கல்லூரிக்கு வந்த தாரணியின் தந்தை பாலாஜி நெடு நேரமாகி அவரது மகளை பார்க்க விடாமல் காத்திருக்க வைத்துள்ளனர். நெடுநேரத்திற்கு பின் ஆறு மணி அளவில்  தாரணி இறந்துவிட்டார் என விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி உறவினர்களுடன் தனது மகளுக்கு நீதி வேண்டும், தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொலை செய்துள்ளனர். மேலும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனின் கல்லூரி என்பதால் காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்கள்.

இறந்த தாரணி ஜன்னல் கம்பியில் துப்பட்டாவைக் கட்டி ஒரு கையில் துப்பட்டாவை கழுத்தை நெரித்து தற்கொலை செய்ததாக விடுதி நிர்வாகம் தெரிவிக்கின்றனர். ஆனால் தாரணியின் கழுத்தில் பெல்டால் கழுத்தை நெரித்து இறந்தது போன்று உள்ளதால் இதற்கு உரிய விசாரணை வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மாணவியின் தாய், 'தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொன்று விட்டனர். எனது மகளை பறிகொடுத்து விட்டேனே' எனக் கூறி கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

Next Story

தொடர்ந்து ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சம்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
 Farmers are afraid of gangs who keep stealing goats

ஈரோட்டில் தொடர்ந்து ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சமடைந்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்துள்ள கரியாக்கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 22 ஆம் தேதி மாலையில் பட்டியில் ஆடுகளை அடைத்து  வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் நேற்று முன்தினம் காலை பட்டியில் வந்து பார்த்தபோது அதிலிருந்த 3 ஆடுகள் மாயமாகி இருந்தன. விசாரணையில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த வடிவில் (66) என்பவரது பட்டியில் இருந்த மூன்று ஆடுகளும் திருட்டுப் போயிருந்தது. அடுத்தடுத்து இரண்டு பட்டியில் ஆடுகள் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதி விவசாயிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருட்டுப் போன ஆடுகளின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும். இது குறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி பகுதியில் தொடர்ந்து கால்நடைகள் திருட்டுப் போய் வந்தது குறிப்பிடத்தக்கது.