பரப்புரை மூலம் 1 கோடி மக்களை சந்திப்போம்! உறுதி மொழி ஏற்பு நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிவிப்பு! அக் 2, காந்தியடிகளின் 150 வது பிறந்த தினத்தில், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் " மது எதிர்ப்பு பரப்புரை " யின் தொடக்கமாக சென்னை சேப்பாக்கத்தில் " மது எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு " நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் உறுதிமொழியை வாசிக்க, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், ஷமீம் அஹ்மது, ஷஃபி, இளைஞர் அணி செயலாளர் அசாருதீன்,MJTS தலைவர் பம்மல் சலீம்,, மருத்துவ சேவை அணி செயலாளர் M.M.பாஷா , மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் பஷீர்,IKP துணை செயலர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் உறுதி மொழி ஏற்றனர். மஜக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்ற இந்நிகழ்வில், மஜக வின் மது எதிர்ப்பு பரப்புரை பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.
![fully avoid liquor sale in Tamilnadu Government to implement! thamimun ansari mla](http://image.nakkheeran.in/cdn/farfuture/UucocZXe145wF1zSFxXpbpXSEVPBA7Aln3JjE1i4H4A/1570031185/sites/default/files/inline-images/thameenmun1.jpg)
பிறகு பத்திரிகையாளர்களிடம் பொதுச் செயலாளர் கூறியதாவது... காந்தியாரின் 150 வது பிறந்த நாளில், அவரது மது எதிர்ப்பு கொள்கையை மஜக முன்னெடுத்திருக்கிறது. சென்னையில் இன்று மஜக நிர்வாகிகள் ஒன்று கூடி மது எதிர்ப்பு உறுதி மொழியை ஏற்று பரப்புரையை தொடங்கி வைத்துள்ளோம். துண்டு பிரசுர வினியோகம், சுவரெழுத்து, சுவரொட்டி, பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள், வீதி முனை கூட்டங்கள், ஊடக செய்திகள், சமூக இணையதள கருத்தாக்கங்கள், தனிநபர் மற்றும் குழு சந்திப்புகள், ஒலி-ஒளி பதிவுகள், வாகனப் பரப்புரைகள், மது எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றல், மதுவுக்கு எதிரான முழக்கங்கள் என 12 வகையான வடிவங்களுடன் எமது ஆயிரக்கணக்கான தொண்டர்கள், மது எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பனியன்களுடன் களப்பணியாற்ற உள்ளனர்.
நகரங்கள், கிராமங்கள் என அக்டோபர் 15 வரை எமது பரப்புரைகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பூரண மது விலக்கை அமல்படுத்துவோம் என்று கூறி, 500 டாஸ்மாக் கடைகளை முதல் கட்டமாக மூடினார். அந்த வழியில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோறுகிறோம். சட்டசபையிலும் இக்கருத்தை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இப்பரப்புரையின் வழியாக 1 கோடி மக்களை சந்தித்து, இக்கோரிக்கையை வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
![fully avoid liquor sale in Tamilnadu Government to implement! thamimun ansari mla](http://image.nakkheeran.in/cdn/farfuture/AxFOWp2gj7ZWi7EcBN1cuBFeMP1U1JcbPci2svrev8Q/1570031202/sites/default/files/inline-images/thameenmun.jpg)
இந்நிகழ்வில் மத்திய சென்னை கிழக்கு மற்றும் மேற்கு, வட சென்னை கிழக்கு மற்றும் மேற்கு, தென் சென்னை கிழக்கு மற்றும் மேற்கு , திருவள்ளுர் கிழக்கு மற்றும் மேற்கு, காஞ்சி வடக்கு மாவட்ட மஜகவின் நிர்வாகிகளும் வருகை தந்து உறுதி மொழி ஏற்றனர். பிறகு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் வாகனங்களில் செல்வோரிடம் மது எதிர்ப்பு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அருகில் VAO க்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்களிடமும், அங்கு உரையாற்ற வருகை தந்திருந்த விவசாய போராளி திரு. P.R. பாண்டியனிடமும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. சென்னை மண்டலம் முழுக்க அதிதீவிரமாக களப்பணியாற்றும் முனைப்போடு, நிர்வாகிகள் புறப்பட்டனர்.