Skip to main content

''காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல்''-திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு  

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

தமிழகக் காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் வாங்கியதில் 350 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், காவல்துறை சம்பந்தப்பட்ட இந்த ஊழலையாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை முறைப்படி நியாயமாக விசாரித்து, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது,

“தமிழ்நாடு காவல்துறைக்கு கேமிரா, சி.சி.டி.வி., டிஜிட்டெல் மொபைல் ரேடியோ உள்ளிட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள்” கொள்முதல் செய்யும் 350 கோடி ரூபாய் டெண்டரில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது, கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே 88 கோடி ரூபாய்  வாக்கி டாக்கி ஊழல் குறித்து உள்துறைச் செயலாளரே 11 விதிமுறை மீறல்களை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினார். அப்போதே, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில்,  “உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் வாக்கி டாக்கி ஊழலை விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால் ஊழலில் புரையோடிப் போயிருக்கும் அ.தி.மு.க. அரசு, அந்த வாக்கி டாக்கி விவகாரத்தை மூடி மறைத்ததன் தொடர்ச்சியாக, தற்போது 350 கோடி ரூபாய் ஊழல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

 

dmk stalin report


தமிழகக் காவல்துறையில் உள்ள தொழில் நுட்பப் பிரிவின் எஸ்.பி.யாக இருக்கும் அன்புச்செழியன், முன்பு டி.ஜி.பி.யாக இருந்த “குட்கா புகழ்” திரு டி.கே. ராஜேந்திரனின் நேரடி உத்தரவுக்கு மட்டுமே செவி சாய்த்து- கொள்முதல் டெண்டர்களை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகித்தார் என்பது, தமிழகக் காவல்துறை அலுவலகத்தில் உள்ள  உயர்  போலீஸ் அதிகாரிகள் அனைவருக்கும்  நன்கு தெரியும்.

“வி- லிங்” என்ற கம்பெனி பற்றியும்- அந்தக் கம்பெனிக்கு ஏன் “தொழில்நுட்பப் பிரிவில்” உள்ள டெண்டர்களில் பெரும்பாலானவை   கொடுக்கப்படுகின்றன என்பதும் டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள கடைக்கோடி ஊழியர் வரை அனைவருக்கும் தெரியும். இது போன்ற சூழலில் தற்போது காவல்துறையின் தொழில் நுட்பப் பிரிவில் வழங்கப்பட்டுள்ள டெண்டர்களில் “வி-லிங்” என்ற கம்பெனிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதும், அதிலும் குறிப்பாக டிஜிட்டல் மொபைல் ரேடியோவிற்கான 16 மாவட்ட டெண்டர்களில்,  10 மாவட்ட டெண்டர்கள் இந்தக் கம்பெனிக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

350 கோடி ரூபாய் டெண்டரில்- அதுவும் குறிப்பாக மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் என்பது, அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையைக் கூட விட்டு வைக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது.

வழக்குகளின் புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை ஆய்வாளர்களுக்கும், டி.எஸ்.பி.களுக்கும் வாகன வசதி இல்லை. காலாவதியான வாகனங்களை, மோட்டார் சைக்கிள்களை மாற்ற அ.தி.மு.க. அரசுக்கு மனமில்லை. ஒரு பக்கம் ஒட்டுமொத்தப் புலனாய்வுப் பணிகளே வாகனப் பற்றாக்குறையால் அ.தி.மு.க .ஆட்சியில் ஸ்தம்பித்து நிற்க - காவல்துறை நவீன மயக்கலுக்காக ஒதுக்கப்படும் இந்த நிதியிலும் இவ்வளவு பெரிய ஊழல் என்பது, போலீஸ் துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமிக்கு வெட்கமாக இல்லையா?

 
இந்த லட்சணத்தில் தன்னுடைய தொகுதியிலே போய் நின்று கொண்டு, அவருக்கு என்ன தெரியும், இவருக்கு என்ன தெரியும் என்று வெற்றுச் சவால் விட்டுப் பேசுவதாலே, அனைத்தும் அறிந்த “ஞானப்பழம் “ இவர் என்று ஊர் நம்பிவிடும் என நப்பாசை கொள்ளும் முதலமைச்சரைப் பார்த்து அனைவரும் பரிதாபப்பட்டு கைகொட்டி நகைக்கிறார்கள்.
 

dmk stalin report

 

முதலமைச்சரே ஊழல் புகாருக்கு உள்ளாவதும், அமைச்சர்களின் ஊழல் புகார்களை எல்லாம் மூடி மறைக்கும் காரியத்தில் அ.தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விஜிலென்ஸ் துறை தீவிரமாக ஈடுபட்டதுமே; இப்படியொரு மிக மோசமான ஊழல் காவல்துறையிலேயே நடைபெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.


ஆகவே காவல்துறை சம்பந்தப்பட்ட இந்த ஊழலையாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை முறைப்படி நியாயமாக விசாரித்து- உண்மைக் குற்றவாளிகளை- அவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முதலமைச்சரின் துறையிலேயே நடைபெற்ற ஊழல் என்பதால் - இந்த ஊழல் வழக்கு விசாரணை தொடர்பான எந்த விவரங்களையும் முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகளுடன் லஞ்ச ஊழல் தடுப்புத் துறை பகிர்ந்து கொள்ளாமல்- சுதந்திரமாக இந்த விசாரணையை நடத்தி, ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் காட்ட வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு முனைகளிலும் பொது மக்களின் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனதைப்போல, இதிலும் பொய்த்துப் போய்விடுமோ என்று பொதுமக்கள் கவலையுடன் காத்திருக்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது.








 

.
 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்