Skip to main content

நிதி சிக்கலில் சிக்கித் தவிக்கும் சிதம்பரம் நகராட்சி!!

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

சிதம்பரம் நகராட்சியில் ரூ.22 கோடியே 17 லட்சத்திற்கு வரி பாக்கி உள்ளதால், நகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்று நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,

 



சிதம்பரம்  நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் புதிய சாலை, பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் அபிவிருத்தி உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்கு நகராட்சி மூலம் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி உள்ளிட்ட வரிகள் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யப்படுகிறது. இதுபோன்ற வரி மூலம், பல்வேறு திட்டங்களுக்காக வாங்கப்பட்ட கடன்களுக்கு வட்டி, ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்டவை வழங்க வேண்டும்.

 

chithamparam



கடந்த 6 ஆண்டுகளாக வரி நிலுவைத்தொகை  கோடிக்கணக்கில் உள்ளதால், சிதம்பரம் நகராட்சி கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சிதம்பரம் நகராட்சிக்கு வரி மற்றும் வரியில்லா இடங்களில் நகராட்சி வசூல் செய்ய வேண்டிய நிலுவைத்தொகை ரூ.22 கோடியே 17 லட்சமாக உள்ளது.  சொத்து வரி மட்டும் ரூ.15 கோடியே 80 லட்சம் நிலுவையில் உள்ளது. இதில் பழைய நிலுவைத்தொகை மட்டும் ரூ.9 கோடியே 12 லட்சமாகும். இதில் 47 லட்சம் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளன.  காலி மனை வரியாக ரூ.33.51 லட்சமும், தொழில் வரியாக ரூ.1கோடியே 26 லட்சமும், குடிநீர் கட்டணமாக ரூ.1 கோடியே 79 லட்சமும், குப்பை வரியாக ரூ.1 கோடியே 42 லட்சமும் நிலுவையில் உள்ளது.

 

chithamparam



நிதி நெருக்கடி காரணமாக,  நகராட்சிவாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் சிரமத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக சிதம்பரம் நகராட்சி மின்துறைக்கு ரூ.1 கோடியே 15 லட்சம் மின் கட்டண பாக்கி வைத்துள்ளது. நகராட்சி ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்க ரூ.50 லட்சம் தேவைப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சம்பளம் கொடுப்பதற்கே நகராட்சி நிர்வாகம் சிக்கலை சந்தித்து வருகிறது. இதனால், நகராட்சி நிர்வாகம் வரிகளை வசூல் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. வரி பாக்கி உள்ளவர்களின் வீடுகளில் நகராட்சி ஊழியர்கள், 'டிமாண்டு நோட்டீஸ்' வழங்கி, வரி பாக்கியை வசூல் செய்வதில் தீவிரம் காட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 



குறித்த காலத்தில் வரி செலுத்தவில்லை என்றால், கோர்ட் மூலம் சம்மன் வழங்குவது, சீல் வைப்பது, ஜப்தி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. வரி வசூல் நடந்தால்தான், மக்களுக்கான திட்டங்கள் தடையில்லாமல் நிறைவேற்ற முடியும் எனவே பொதுமக்கள் நகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார். இவருடன் நகராட்சி பொறியாளர் மகாதேவன், மேலாளர் காதர்ஹான் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
man who went to bathe in the Chidambaram temple pool drowned

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவில் பழம்பெரும் சிவன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் சனிக்கிழமை மாலை திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவில் குளத்தில் இறங்கி சுவாமி மற்றும் பக்தர்கள் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் குளக்கரையில் கூடியிருந்தனர். சுவாமிக்கு குளக்கரையில் பூஜை நடந்து தீர்த்தவாரி நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து பக்தர்களும் பொதுமக்களும் குலத்தில் நீராடச் சென்றனர் அப்போது கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(47) என்பவர் கோயில் குளத்தில் இறங்கி நீராடினார். சிறிது தூரம் தண்ணீரில் நீந்தி சென்று குளத்தின் நடுவே உள்ள மண்டபம் அருகே நீரில் மூழ்கியுள்ளார். மீண்டும் அவர் வெளியே வரவில்லை. 

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் நகர காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட வெங்கடேசனை குளத்தில் இறங்கி ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து ஒரு மணி நேரம் தேடிய நிலையில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.  இது குறித்து சிதம்பர நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story

விமரிசையாக நடைபெற்ற நடராஜர் கோவில் ஆருத்ரா தேர் திருவிழா

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Nataraja Temple Arudra Chariot Festival held critically

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக்கு இருமுறை தேர் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தேர்த்திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மார்கழி ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை ஐந்து மணிக்கு சாமி, கோவில் கருவறையிலிருந்து தேருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. இதில் விநாயகர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, முருகன் உள்ளிட்ட தேர்கள் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

இதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரம் கால் மண்டபத்திற்கு சாமிகளை எடுத்துச் சென்று மகா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து நாளை மதியம் 3 மணிக்குள் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். காவல்துறை பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்பட ஏற்படாத வகையில் தீவிர காவல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.