தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சி டெண்டர்கள் குறித்தும், மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலின் படி மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பாகவும் தமிழக அரசை விமர்சித்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான செய்தி முரசொலி நாளிதழில் செப்டம்பர் 4, டிசம்பர் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வெளியானது.
![CHENNAI HIGH COURT DMK MK STALIN CASE](http://image.nakkheeran.in/cdn/farfuture/HSR0G2ZdEgJPEurTwF2T6jf4KzII56ma0hhBqsx81q4/1583490957/sites/default/files/inline-images/MK%20S2.jpg)
அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் தமிழக முதலமைச்சர் சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்குகளில் ஏப்ரல் 8-ம் தேதி நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
![CHENNAI HIGH COURT DMK MK STALIN CASE](http://image.nakkheeran.in/cdn/farfuture/TRg9sdu70GYLFG_mkZwysPhxQ8WtwYzn6ZcOPeYp35A/1583490985/sites/default/files/inline-images/Chennai_High_Court%20%282%291111111_14.jpg)
இந்நிலையில், இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி மு.க. ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில், ஊழல் நடந்திருப்பது குறித்து மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அறிக்கை வெளியிட்டதாகவும், அமைச்சர் வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேட்டு வழக்கை திசை திருப்பும் நோக்கிலேயே தன் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், மார்ச் 23-ம் தேதிக்குள் வழக்கு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.