திருச்சி முக்கொம்பை அடுத்த வாத்தலை கிராமத்தில் இருந்து பாசன வசதிக்காக புள்ளம்பாடி வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்திலும் சில மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் முக்கொம்பை அடுத்த வாத்தலை கிராமத்தில் காவிரி ஆற்றின் இடது கரைப்பகுதியில் உள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் இருந்து தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு திறந்து வைத்தார். திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் 90 கிலோ மீட்டர் பயணித்து சுக்கிரன் ஏரியில் இந்த புள்ளம்பாடி வாய்க்கால் கலக்கிறது. இதன் மூலம் திருச்சி மாவட்டம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நேரடியாக 28 குளங்கள் உட்பட மொத்தம் 22,114 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே என் நேரு, “கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. கண்டிப்பாக எல்லா பகுதிகளுக்கும் தண்ணீர் சென்று சேர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.