
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2017- ஆம் ஆண்டு நிதி சிக்கலை காரணம் காட்டி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் 3600 பேர் தமிழக அரசு அலுவலகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் 3 வருட ஒப்பந்த அடிப்படையில் பணி நிரவல் பணிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
இவர்களின் பணி காலம் கடந்த 11ஆம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் அவர்களை பல்கலைகழகத்திற்கு அழைத்துக் கொள்ளும்படி, பல்கலைக்கழக பதிவாளரிடம் தனித்தனியாக ஊழியர்கள் சந்தித்து மனு கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் திங்களன்று பணி நிரவலுக்கு சென்ற ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் உள்ளிட்ட அனைவரும் நூதன முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் குடையை பிடித்துக்கொண்டு வரிசையாக சமூக பரவல் இல்லாமல் நின்று மனுக்களை கொடுக்கும் போராட்டத்தை செய்தனர்.
இதனை அறிந்த அண்ணாமலை நகர் காவல் துறையினர் 144 தடை உத்தரவு உள்ளதால் இங்கு கூடுவதற்கு அனுமதி கிடையாது என அனைவரையும் அனுப்பினர். பின்னர் மனுக்களை அனைத்து ஊழியர்களிடமும் பெற்றுக்கொண்டு இருவர் மட்டும் பதிவாளரிடம் கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து பணிநிரவல் ஊழியர்களின் நலச்சங்க தலைவர் குமரவேல் மற்றும் சங்க நிர்வாகியுடன் சென்று பதிவாளர் கிருஷ்ணமோகனை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் இவர்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என பதிவாளர் உறுதி கூறினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பத்தால் பல்கலைக்கழகத்தில் சிறு பரபரப்பு ஏற்பட்டது.