
காலணி அணிந்து நடந்து சென்றதற்காக 4 வெளிநாட்டு மாணவர்களை உள்ளூர்வாசிகள் கொடூரமாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், வதோதரா பகுதியில் உள்ள பருல் பல்கலைக்கழகத்தில் தாய்லாந்து, சூடான், லண்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 4 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். சம்பவம் நடந்த தினத்தன்று, மாணவர்கள் விடுதி அருகே உள்ள தர்கா வழியாக நடந்து கொண்டிருந்தனர். மேலும், அவர்கள் புகை பிடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சில உள்ளூர் மக்கள், குஜராத் மொழியில் ஊர் பகுதியில் காலணி அணியக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். குஜராத் மொழியில் கூறியதால், அந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு புரியாமல் போனதால், உள்ளூர் மக்களின் அறிவுறுத்தல்களை கேட்காமல் இருந்துள்ளனர்.
இதில் கோபமடைந்த உள்ளூர் மக்கள், மாணவர்களை கீழே தள்ளி அடித்துள்ளனர். மாணவர்களைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட நபர்கள் சுற்றி இருந்து மரக் கட்டையாலும், கிரிக்கெட் மட்டையாலும், கற்களாலும் அடித்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் அந்த மாணவர்கள் படுகாயமடைந்து மயக்கமடைந்தனர். இது தொடர்பான சம்பவத்தை தூரத்தில் இருந்த ஒரு நபர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரின் மனதையும் பதைபதைக்க வைத்தது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முக்தியார் ஷேக், ராஜேஷ் வசவா, ரவி வசவா, சுவராஜ் வசவா, பிரவின் வசவா மற்றும் 2 சிறுவர்கள் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.