Skip to main content

8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்! கணக்கு ஆசிரியருக்கு செருப்படி!!

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
sathis


சேலம் மூன்று ரோடு அருகே ஸ்ரீவித்யா மந்திர் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சதீஸ் (24) கணிதப்பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
 

sathis


இதே பள்ளியில் அரிசிபாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் 8 வயது மகள், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். இன்று காலை மாணவி பள்ளிக்குச் செல்ல மறுத்து வீட்டிலேயே இருந்தாள். பள்ளி செல்லாததன் காரணம் குறித்து சிறுமியிடம் பெற்றோர் கேட்டதற்கு, பள்ளியில் உள்ள கணித ஆசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவுகள் தருவதால் இனிமேல் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளாள்.

இதனால் கொதிப்படைந்த பெற்றோர் இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வித்யா மந்திர் பள்ளிக்குச் சென்று நிர்வாகிகளிடம் நடந்த விவரங்களைக் கூறினர். பின்னர் பள்ளிக்கு வெளியே ஆசிரியர் சதீஸை இழுத்து வந்த அவர்கள், பள்ளி வாசல் முன்பு செருப்பால் அடித்து துவைத்தனர். இரண்டு பெண்களும், சில ஆண்களும் அவரை இழுத்துப்போட்டு சரமாரியாக செருப்புகளாலும், கைகளாலும் தாக்கினர். இதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
 

sathis


இதுகுறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து, போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு என்பதால் இந்த வழக்கை சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் சதீஸை போலீசார் கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்