தர்மபுரி அருகே, தனியார் மாவு அரைக்கும் ஆலையில் தயாரிக்கப்படும் மாவைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து 3 கோடி ரூபாய் மோசடி செய்த 8 ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் தென்னரசு (வயது 39). இவர், சொந்தமாக மாவு அரைக்கும் ஆலை நடத்தி வருகிறார். இவர், மாவட்ட குற்றப்பிரிவில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ''என்னுடைய உறவினர் எழில் பிரகாஷ் என்பவரைக் கடந்த 2018- ஆம் ஆண்டு, மாவு அரைக்கும் ஆலையில் மேலாளராக நியமித்தேன். ஆனால் கடைகளுக்கு அனுப்பி வைக்கக் கூடிய மாவைக் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த மோசடியில் மேலும் 7 பேருக்குத் தொடர்பு உள்ளது. இதன் மூலம் 3 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறியுள்ளார்.
அதன்பேரில், காவல்துறையினர் எழில் பிரகாஷ் உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.