Skip to main content

“சசிகலா உடல்நிலை மோசமானதற்கு பின்னணியில் சதி இருப்பதாகத் தோன்றுகிறது” - ஜவாஹிருல்லா 

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

"Suspicion arises that there is a conspiracy to make Sasikala's health worse ..." - Jawaharlal Nehru

 

மதுரை, திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தென்கிழக்கு மண்டல பொதுக்குழு மாநாடு அவனியாபுரம் அருகே உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.

 

மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் இந்தப் பொதுக்குழு மாநாடு நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 

இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், மனித நேய மக்கள் கட்சி சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. அக்கட்சியினர் 80க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். பொதுக் குழு கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற, வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறுதல், தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய, சமையல் எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

இந்தப் பொதுக்குழு மாநாட்டில் ஜவஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, "மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களுக்குக் கூட தகவல்கள் தெரிவிக்காமல் கூட்டங்களை நடத்தக் கூடிய நிலை உள்ளது. அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய தலைமைச் செயல் அலுவலர் இல்லாமல் நிறைவேற்றப்பட கூடிய நிலையில் உள்ளது. இது எவ்வளவு அவலமான நிலையாக உள்ளது.


மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி இருக்கக் கூடிய நான்கு மாசி வீதிகளில் நடந்து சென்றபோது அங்கு இருக்கக்கூடிய சாலைகள் எல்லாம் பள்ளமும் குழியுமாக உள்ளது. இது போன்ற 14 திட்டங்களில் 5 ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை மதுரையில் உருவாக்கி அந்த 14 இடங்களும் அரைகுறையாக தான் உள்ளது.

 

இதேபோன்றுதான் மத்திய அரசு கொண்டு வரக்கூடிய பல்வேறு திட்டங்கள் எல்லாம் மற்றவர்களுக்கு கேடு செய்யக்கூடிய வகையிலே இருக்கின்றது. அதன் மிகப்பெரிய ஒரு எடுத்துக்காட்டாகத்தான் வேளாண்துறை குறித்த அந்த மூன்று சட்டங்கள் அமைந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளை நம்முடைய நாட்டில் நடத்த வேண்டும் என்றால் ட்ரஸ்ட், அறக்கட்டளைகள், மெடிக்கல் கவுன்ஸில் ஆஃப் இந்திய எட்டாவது பிரிவு தொடர்பான சட்டங்களும், எட்டாவது பிரிவின் அடிப்படையில் எந்த லாப நோக்கமில்லாத அமைப்புகளால் தான் நடத்த முடியும்.
 

ஆனால், தற்போது மோடி அரசு அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. உதாரணமாக, தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளும், யூனிவர்சிட்டி என்று சொல்லக்கூடிய நிகர்நிலை பல்கலைக் கழகத்துடன் இணைந்து மருத்துவக் கல்லூரியாக மாற்றலாம் என்ற ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. 


இதன் மூலமாக ஏழை எளிய மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் படிப்பது பகல் கனவாக உள்ளது. இந்த அரசு, எந்த அளவுக்கு கார்ப்ரேட்டுக்கு இசைவாகச் செயல்படுகின்றது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. தொடர்ச்சியாகத் தமிழகத்தினுடைய உரிமைகளை எல்லாம் பறிக்கக் கூடிய வகையிலேதான் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மாறினால்தான் தமிழகத்தினுடைய உரிமை, வழக்கமாக இருக்கக்கூடிய மாநில சுயாட்சி, சமூக நல்லிணக்கம், சமூக நீதி இந்த மூன்றையும் நிலைநாட்ட முடியும். அர்னாப் கோஸ்வாமிக்கு புல்வாமா தாக்குதல் குறித்த செய்தி அளித்தது யார்? அந்த நிறுவனத்தினுடைய தலைவருடன் அவர்கள் செய்த வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் அதை அம்பலப்படுத்தி இருக்கிறது. 

 

இதைச் சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாது. நிச்சயமாக ஒவ்வொரு அமைச்சரும் ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்டுதான் அமைச்சர்களாக இருக்கிறார்கள். கோஸ்வாமிக்கு பாலக்கோட்டில் இன்னும் சில நாட்களில் தாக்குதல் நடத்தப் போகிறார்கள் அதுவும் பாகிஸ்தானில் இருந்து நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கசியவிட்டது யார். அப்படிக் கசியவிட்டவர்கள் நிச்சயமாகத் தேசத் துரோகிகள் தான். 

 

இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். கோஸ்வாமி மீது மட்டுமல்ல, அந்தத் தகவலை கொடுத்தவர்கள் மீதும் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதுதான் நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 
 

சசிகலா உடல் நிலை குறித்த செய்தி ஐயத்தை எழுப்புகிறது. அவர் பரிபூரணமாகக் குணமடைந்து விடுதலையாக வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருக்கின்றது. ஆனால், பரவலாக அவருடைய அரசியல் வருகை யாருக்கு ஆபத்தாக முடியும் என்றால் பா.ஜ.க.வுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தான் ஆபத்தாக முடியும். எனவே இதில் ஒரு சதி இருப்பது போல சந்தேகம் வலுவாக எழுகின்றன. 
 

எடப்பாடி பழனிசாமி, தலைமையில் அ.தி.மு.க. அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை, மோடி அரசுடன் கூட்டுச் சதி செய்து வருகின்றார் என்பதுதான் எதார்த்தமான சூழலாக இருக்கின்றது. தமிழக இளைஞர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் அனைத்தும் பறி போயிருக்கக் கூடிய ஒரு சூழலைப் பார்க்கின்றோம். எனவே நாங்கள் வேலை வாய்ப்புகளை தமிழக மக்களுக்கு உருவாக்கி இருக்கிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்வது உண்மைக்குப் புறம்பானதாக இருக்கின்றது. 


தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். மாநில மக்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.  அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இழந்துவிட்ட பல்வேறு உரிமைகள் எல்லாம் மீட்கப்பட வேண்டும். எங்களுடைய அணி வெற்றிபெறும். கூட்டணி மற்றும் தொகுதிகள் குறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பேச்சுவார்த்தை நடைபெறும்.

 

பா.ஜ.க. கட்சி சிறுபான்மையினர் நலனுக்கு எதிராகத் தான் உள்ளது. 1957ல் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்ட முறையைப் பின்பற்றித்தான் தற்போதைய பா.ஜ.க.வின் புதிய கல்விக் கொள்கை திட்டம் உள்ளது. பா.ஜ.க.வின் எந்த ஒரு செயலும் சிறுபான்மை நலனுக்கு எதிராகத் தான் உள்ளது” என ஜவாஹிருல்லா கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்