
சிதம்பரம் அருகே திருட்டு வழக்கில் தொடர்புடையவர் காவலரை தாக்கியதால் ஆய்வாளர் அவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் 10 பவுன் தங்க நகை திருட்டு வழக்கில் கன்னியாகுமரியை சேர்ந்த மைக்கேல் என்பவரின் மகன் ஸ்டீபன்(38) என்பவரை அண்ணாமலை நகர் காவல் துறையினர் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட நகையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருட பயன்படுத்திய பொருட்கள் சிதம்பரம் அருகே உள்ள சித்தலாபாடி கிராம சாலையில் உள்ள முட்புதரில் மறைத்து வைத்திருப்பதாக ஸ்டீபன் தகவல் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த நகையை எடுப்பதற்காக அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் காவலர்கள் ஞானசேகரன் உள்ளிட்டவர்கள் வியாழக்கிழமை காலை அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று நகையை எடுக்க செல்லும்போது தப்பி ஓடும் முயற்சியில் காவலர் ஞானசேகரனை ஸ்டீபன் கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் அம்பேத்கர் ஸ்டீபனை துப்பாக்கியால் முட்டியில் சுட்டுப் பிடித்துள்ளார்.
பின்னர் இவரை உடனடியாக சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிதம்பரம் பகுதியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய வரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்டீபன் தமிழகத்தில் தஞ்சை ஈரோடு திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரிய வருகிறது.