Skip to main content

“தண்ணீர் பாட்டிலை பார்த்தாலே அலர்ஜி” - ஓ.பி.எஸ்.

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

OPS Comment about ADMK General Secretary election

 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதியை இ.பி.எஸ். அறிவித்து, இன்று முதல் ஆளாய் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பி.எஸ். ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

இதில் பேசிய ஓ.பி.எஸ், “ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிமுகவின் அமைப்புத் தேர்தல் நடத்தவேண்டும் என்பதுதான் கட்சியின் சட்டவிதி. கட்சியின் உட்சபட்ச பதவியில் இருக்கப்போகிறவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் வந்துதான் கட்சியில் உள்ள மற்ற அமைப்பு ரீதியான தேர்தல்களை நடத்த வேண்டும். 

 

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடப்பதற்கு முன்பாக புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கும், ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்கள் புதுப்பித்துக் கொள்ளவும் உறுப்பினர் படிவம் கொடுக்க வேண்டும். அதன்பிறகு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும். இந்தப் பணிகள் எல்லாம் முடிந்த பிறகுதான் கட்சியின் உட்சபட்ச தேர்தல் நடத்த வேண்டும். 

 

எதையுமே முறைப்படி செய்யாமல் பிக்பாக்கெட் அடித்துச் செல்வதுபோல் பொதுச்செயலாளர் தேர்தல் நடக்கிறது; இது ஏற்றுக்கொள்ளக் கூடியதா. கேடிகளையும், ரவுடிகளையும் காலை ஐந்து மணிக்கே அழைத்து வந்து உட்கார வைத்து பொதுக்குழு நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளரான நானும், இணை ஒருங்கிணைப்பாளரான அவரும் சேர்ந்து எடுத்த தீர்மானங்களைப் புறக்கணித்து, கட்சியின் பொருளாளர் எனும் முறையில் பொதுக்குழுவில் கட்சியின் வரவு செலவை நான் வாசிக்க வேண்டும். அதற்குக் கூட வாய்ப்பு இல்லாமல், நிகழ்ச்சி நிரல் பின்பற்றாமல் அந்தப் பொதுக்குழு நடைபெற்றது. தண்ணீர் பாட்டிலை பார்த்தாலே ஒரு அலர்ஜி வருகிறது. எவ்வளவு அராஜகம் நிறைவேறியது என்பது உங்களுக்கு தெரியும். 

 

இந்தியத் தேர்தல் ஆணையம் அந்தப் பொதுக்குழுவை அங்கீகரிக்கவில்லை. 11ம் தேதி அவர்களாகவே ஒரு பொதுக்குழு நடத்தி சட்டவிதிகளை திருத்தியது செல்லாது என்பதால் தான் கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற அமர்வு, உச்சநீதிமன்றம் வரை சென்றோம். அங்கெல்லாம் பல தரப்பான தீர்ப்புகள் வந்தன. அதன்பிறகு மக்கள் மன்றத்திற்கு வந்தோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்களும் கட்சி தொண்டர்களும் இவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தால் இவர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

 

ஒரு சின்ன தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை கொடுத்து எங்கள் வேட்பாளரை திரும்பப் பெற்ற பிறகு 66 ஆயிரம் வாக்குகளை இழந்து அதிமுகவை தோற்கடிக்கச் செய்தவர் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். 

 

எம்.ஜி.ஆர். கட்சியை உருவாக்கியபோது கட்சியின் சட்டவிதி எப்படி இருக்கவேண்டும் என வடிவமைத்தார். அதைத்தான் ஜெயலலிதாவும் 30 ஆண்டுகளாக கடைப்பிடித்தார். கட்சி உருவானதிலிருந்து 50 ஆண்டுகள் இன்று வரை கட்சி சட்டவிதியின்படி தான் நடந்தது. அதையெல்லாம் தூக்கிப்போட்டாகிவிட்டது. 

 

கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என நாம் கொடுத்த அந்த மரியாதையை தனக்கு உரியது என தானே பட்டம் சூடிக்கொள்வது போல நிறைவேற்றிவிட்டு, ஒரு சாதாரண தொண்டன் கூட பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்பதையும் மாற்றி, பத்து மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், பத்து மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும், ஐந்து வருடம் கட்சியின் தலைமை கழக பொறுப்பில் இருக்க வேண்டும் என சட்டவிதிகளை மாற்றி, கோடீஸ்வரர்கள் தான் அந்தப் பதவிக்கு போட்டியிட முடியும் எனும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தானும் தன்னைச் சுற்றி இருப்பவர்களும் தான் கட்சியின் பதவிகளுக்கு வரவேண்டும் என சட்ட விதிகளை மாற்றுவது எந்த விதத்தில் நியாயம். 

 

தமிழகத்தில் இதுவரை இவ்வளவு சர்வாதிகாரியாக எந்த அரசியல்வாதியும் இருந்ததில்லை. இன்று அந்த நிலைக்கு அவர் வந்துள்ளார். அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் சகோதரத்துவத்துடன் கட்சியை நடத்தினர். ஜெயலலிதா தாய் உள்ளத்தோடு கட்சியை நடத்தினார். இவர் எப்படி நடத்துகிறார். தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் தோல்வி. நாடாளுமன்றத்தில் எங்கள் தேனி மாவட்டத்தில் மட்டுமே வெற்றி. மற்ற 38 தொகுதியிலும் தோல்வி. இந்த நிலைமைக்கு கட்சியை கொண்டு சென்றது யார். 

 

எல்லாமே தப்பு தப்பாகச் செய்கிறார்கள். களத்திற்குச் சென்று மக்களை நேரடியாகச் சந்திக்கும்போது அவர்களுக்கு தெரியும். சிவகங்கைக்குச் சென்றபோது விமானத்தில் அவருடன் வந்த இளைஞர் உணர்ச்சிவசப்பட்டு எப்படி பேசினாரோ, அந்தக் கருத்து தான் தமிழ்நாடு முழுக்க நிலவி நிற்கிறது. தமிழ்நாட்டில் அவர் எங்கு சென்றாலும் இந்த மாதிரியான எதிர்ப்பலை அவரை நோக்கி பாயும். இந்த அலையை நாம் உருவாக்கவில்லை. அவரே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.