Skip to main content

மனைவியின் அஸ்தியை கரைத்த அமைச்சர்! சட்டம் அனைவருக்கும் சமமானது தானே...? என கேள்வி எழுப்பும் ம.நீ.ம.

Published on 03/05/2020 | Edited on 03/05/2020

 

கரோனோ வைரஸ் பரவலால் இந்தியாவில் தொடர் ஊடரங்கு அமுலில் உள்ளது. தமிழகத்தில் தலைநகரில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் இன்னும் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனோ பயத்தில் பலரும் சென்னையிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்வதால் முறையான பாதுகாப்பு இல்லாமல் தனிமைபடுத்தல் இல்லாமல் இருந்தால் மீண்டும் தமிழகம் முழுவதும் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

 

 

நமக்கு கரோனா வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறார் கரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்.
 

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் சிவப்பு பகுதியில் இருந்து ஆரஞ்சு பகுதிக்கு தற்போது மாறியுள்ளது. இந்த ஊரடங்கில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள காவிரி கரையில் இறந்தவர்களுக்கு திதி கொடுக்க சென்றவர்களை போலிஸார் விரட்டியடித்து வீட்டில் வைத்து கொடுங்கள் என்று கடுமையான நெருக்கடி காட்டினார்கள்.
 

ஆனால் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இறந்து போன தன்னுடைய மனைவிக்கு திதி கொடுப்பதற்காக இன்று திடீர் என காலையில் 6 கார்களுடன் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் வந்து இறங்கினார். திடீர் என கார்கள் அதிரடியாக வந்து இறங்கியதை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

காரில் வந்தவர்கள் அனைவரும் அம்மா மண்டபம் படித்துறையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அஸ்தி கரைப்பு, காரியம் எல்லாம் நடைபெற்றது. போலிஸ் பாதுகாப்புடன் பூஜை முடிந்தவுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாவாசை அன்று திதி கொடுக்க வந்த பொதுமக்களை போலிஸ் அடித்து விரட்டியது குறிப்பிடதக்கது.
 

இந்தநிலையில் சட்டம் அனைவருக்கும் சமமானது தானே...? என கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர்.கிஷோர்குமார். மேலும், தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன். இவரது முதல் மனைவி காலமானார். இதனை தொடர்ந்து இன்று 03.05.2020ம் தேதி காலை சுமார் 07.30 மணிக்கு திருச்சி, ஸ்ரீரங்கத்திலுள்ள அம்மாமண்டபத்திற்கு சுமார் நான்கைந்து கார்களில் வந்தவர் மறைந்த தனது மனைவிக்கு திதி கொடுத்து சென்றுள்ளார். 


இதற்கு முன்பு கரோனா காலத்தில் அமாவாசையன்று திதி கொடுத்தவர்கள் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே சட்டம் அனைவருக்கும் சமம் என்பதால் அமைச்சர் மீது உரிய சட்டபடியான நடவடிக்கை வேண்டி தமிழ்நாடு காவல் துறையில் ஆன்லைன் முலமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.