Skip to main content

‘ராஜேந்திரபாலாஜியால் மோசம் போனோம்!’ - சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குமுறல்!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

ADMK former MLA's disappointed by rajendra balaji

 

எம்.எல்.ஏ. என்ற அங்கீகாரம், பொதுவாழ்க்கையில் கிடைக்கும் புகழ் என்பதெல்லாம், அரசியல் வாழ்க்கையில் பலருக்கும் தற்காலிகமானதே! ஆனாலும், இந்த உண்மையை முதன்முதலில் அனுபவரீதியாக உணரும்போது, அவர்களுக்கு ஏற்படும் மனவலியைச் சொல்லி மாளாது. விருதுநகர் மாவட்டத்திலும், வேட்பாளர் அறிவிப்பால், ஆதங்கம், ஆத்திரம், சோகம் சூழப்பட்ட நிலையில் ஆளும்கட்சியைச் சேர்ந்த மூவர் உள்ளனர். 

 

சாத்தூர் சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு நிச்சயமாக சீட் கிடைக்காது என்பது, அக்கட்சியினர் பலருக்கும் முன்பே தெரிந்த விஷயம்தான். ஏனென்றால், ராஜேந்திரபாலாஜியுடனான நட்பு பகையாக மாறி, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பகிரங்கமாக மேடையிலேயே பேசிவிட்டார் ராஜவர்மன். ஆனாலும், ராஜேந்திரபாலாஜியையும் மீறி, கட்சித் தலைமையின் கரிசனத்தால் சீட் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில், தொகுதி மக்களின் நல்லது கெட்டதுகள் அனைத்திலும் கலந்துகொண்டு, சுறுசுறுப்பு காட்டிவந்தார். 

 

ADMK former MLA's disappointed by rajendra balaji

 

ராஜேந்திரபாலாஜியோ ‘உன்னை விட்டேனா பார்..’ என்று அவருக்கு சீட் கிடைக்கவிடாமல் செய்துவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். ஆனாலும், பகை அரசியலால் வெறுத்துப்போன ராஜவர்மன், டிடிவி தினகரனைச் சந்தித்து அமமுகவில் இணைந்துவிட்டார்.

 

ADMK former MLA's disappointed by rajendra balaji

 

ஸ்ரீவில்லிபுத்தூர் சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ. சந்திரபிரபாவுக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில், அவருடைய ஆதரவாளர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். ‘பிரச்சாரத்துக்கு வாகனமெல்லாம்  ரெடி பண்ணச் சொன்னார் ராஜேந்திரபாலாஜி. வாகனத்தின் நம்பரைக்கூட அவரே தேர்வு செய்தார். கடைசி நேரத்தில், சீட் கிடைக்கவிடாமல் செய்துவிட்டார்’ என்று சந்திரபிரபா கணவர் முத்தையா புலம்பி வருகிறார். 

 

ADMK former MLA's disappointed by rajendra balaji

 

விருதுநகர் அதிமுகவில் சீனியர்கள் பலர் இருக்கும்போது, பணத்தை வாரியிறைக்கக் கூடியவர் என்பதால், மா.செ. ராஜேந்திரபாலாஜியால் புதிதாக திணிக்கப்பட்டவர் கோகுலம் தங்கராஜ். ஆனாலும், அக்கட்சியினரில் பலரும் அவரை ஏற்றுக்கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது ஒத்துழைத்தனர். ‘எம்.எல்.ஏ. சீட் தனக்கே!’ என்ற எண்ணத்தில், இந்தக் கரோனா காலக்கட்டத்தில், தொகுதி முழுவதும் அரிசிப்பை வழங்கி, கோடிகளில் செலவழித்தார். ஆனால், விருதுநகர் தொகுதி, கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வுக்குப் போய்விட்டது. அதனால் நொந்துபோன கோகுலம் தங்கராஜ், ‘ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டாரே!’ என்று ராஜேந்திரபாலாஜிக்கு எதிராகப் பேசி வருகிறார். ‘விருதுநகரில் நான் சிந்திய வியர்வையும், சேவையும் வீண் போகாது..’ என்று சுயேச்சையாகக் களமிறங்க தயாராகி வருகிறார்.

 

இம்மாவட்ட அதிமுக சீனியர் கண்ணன், “உயிரோ, இந்த வாழ்க்கையோ நிலையில்லாதது. எம்.எல்.ஏ. பதவி எம்மாத்திரம்? தொடர்ந்து நானே எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற ஆசையும் கூட ஏற்புடையதல்ல. ‘வாழ்நாள் முழுவதும் இந்தத் தொகுதியில் இவரே எம்.எல்.ஏ., இந்த மாவட்டத்தில் இவரே அமைச்சர்..’ என்பதெல்லாம் திமுகவுக்குத்தான் சரியாக வரும். அதிமுக அப்படி கிடையாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தவரையிலும் கடைப்பிடித்துவந்த நிலைப்பாடுதான், இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.