Skip to main content

கூட்டணி கட்சிகளை கழட்டி விட்ட அதிமுக!அதிருப்தியில் பாஜக!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 37 இடங்களை திமுக கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இதனால் ஆளும் அதிமுக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. 


இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பாக தீப லட்சுமியும் போட்டியிடுகிறார்.  இந்த நிலையில் வேலூர் இடைத்தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியும் போட்டியிடவில்லை என்று அறிவித்தனர். 

  admk



வேலூர் தேர்தலில் முஸ்லீம் வாக்குகள் அதிகம் இருப்பதால் பாஜகவினரை தேர்தல் பணியில் ஈடுபடுத்த அதிமுக தலைமை யோசிப்பதாக கூறுகின்றனர். பாஜகவை தேர்தல் பணியில் ஈடுபடுத்தினால் சிறுபாண்மையினரின் ஆதரவு அதிமுகவிற்கு சுத்தமாக கிடைக்காது என்றும் நினைக்கின்றனர். மேலும் தேமுதிக தலைமை மீது அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதால் தேமுதிகவையும் வேலூர் தேர்தல் பணியில் ஈடுபடுத்த அதிமுக தயங்குவதாக கூறுகின்றனர். இதனால் வேலூர் தொகுதியில் இருக்கும் ரஜினி மக்கள் மன்றத்தினரை இழுக்க அதிமுக முயற்சி எடுத்து வருகிறது என்றும் தெரிவிக்கின்றனர். வேலூர் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு கடந்த தேர்தலை விட குறைவாக இருக்கிறது என்றும், கட்சிக்குள் உட்கட்சி பூசலும் இருப்பதாக  அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்