
திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலைக்காக திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு வரை இருவழிச் சாலை மட்டுமே அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த இரு வழி சாலையில் வத்தலக்குண்டு அருகே லட்சுமிபுரம் என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நான்கு வழி சாலை பணிகள் முழுமையாக நிறைவடைவதற்குள் சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை சுங்கச்சாவடியை திறப்பதற்கு சுங்கச்சாவடி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்தது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும், இன்று காலை 8 மணிக்கு சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வரும் என்ற நிலையில் திடீரென சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து உபகரணங்களும் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் நிலவியது. இந்நிலையில் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், விவசாயிகள் என பொதுமக்கள் ஏராளமானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் திமுகவினரும் குவிந்து வருவதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வத்தலக்குண்டு - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு நிலவி வருகிறது.

சம்பவ இடத்தில் நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி, பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வத்தலக்குண்டு அருகே சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.