Skip to main content

மாட்டைக் கடத்தியதாக இளைஞர் அடித்து கொலை; பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் கைது

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

maharashtra thane district cow shifted van one youngster incident

 

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் சகாப்பூர் பகுதியில் கால்நடைகளை ஏற்றிக்கொண்டு 3 பேருடன் கடந்த 8 ஆம் தேதி சிறிய ரக சரக்கு வாகனம் ஒன்று சென்றுள்ளது. அப்போது பசுக்காவலர்கள் என்று கூறிக்கொண்டு சுமார் 10 முதல் 15 பேர் அந்த வாகனத்தை மறித்துள்ளனர். இதையடுத்து வாகனத்தில் இருந்தவர்களிடம் மாடுகள் வெட்டுவதற்காக வாகனத்தில் கடத்தப்படுவதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகராறு செய்தனர்.

 

இதையடுத்து வாகனத்தை கைப்பற்றிய கும்பல் அதனை நாசிக் மாவட்டம் இகத்புரி என்ற இடத்தை அடுத்துள்ள காதன்தேவி என்ற பள்ளத்தாக்கு பகுதியில் நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்த 3 பேரையும் தாக்கி உள்ளனர். வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாது 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த கும்பலிடம் சிக்கிய லக்மண் அன்சாரி (வயது 23) என்ற இளைஞரை கடுமையாக தாக்கி விட்டு அந்த கும்பல் தலைமறைவாகிவிட்டனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அன்சாரி, பின்னர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து கடந்த 10 ஆம் தேதி லக்மண் அன்சாரி காதன்தேவி பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் லக்மண் அன்சாரி இறப்பு குறித்து தெரிவிக்கையில், அவர் பள்ளத்தாக்கில் இருந்து தவறி விழுந்து இறந்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்