Skip to main content

இந்தியா கூட்டணி; பஞ்சாப்பில் தனித்துப் போட்டியிடுவது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்

Published on 18/02/2024 | Edited on 19/02/2024
Arvind Kejriwal explains about contesting alone in Punjab

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. 

அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. 

முன்னதாக, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்காமல் தனித்து நிற்க முடிவு செய்தது. இதனையடுத்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். மேலும், காங்கிரஸ் கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (19-02-24) காங்கிரஸ் கட்சி தலைவரான அபிஷேக் சிங்வியின் வீட்டிற்கு மதிய உணவிற்காக சென்றிருந்தார். அதன் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதான். இதுகுறித்து எந்த மோதலும் எங்களுக்குள் இல்லை. டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டெல்லியில் கூட்டணி இல்லாவிட்டால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு எளிதாகிவிடும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்