Skip to main content

விசாரணைக்காக சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜரான ஜெகன்மோகன் ரெட்டி...

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை நேரில் ஆஜரானார்.

 

Jagan Mohan Reddy appeared at CBI court, in connection with disproportionate assets case

 

 

ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து ரூ .1,172 கோடியை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்க தொழிலில் அவர்களுக்கு சாதகமாக மாநில அரசிடமிருந்து உதவி பெற்று தந்ததாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெகன்மோகன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதன்மூலம் கணக்கில் காட்டப்படாமல் கோடிக்கணக்கில் அவர் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டிய சிபிஐ, 2012 மே மாதம் அவரை கைது செய்து 16 மாதங்கள் சிறையில் அடைத்தது. 16 மாதங்களுக்கு பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.  

அவர் மீதான இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ அதிகாரிகள் 11 குற்றப்பத்திரிகைகள் மற்றும் ஒரு துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஜெகனும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். ஆனால் முதல்வராக பதவியேற்ற பின்னர், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு ஜெகன்மோகன் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே ஜெகன்மோகனுக்கு நேரில் ஆஜராவதிலிருந்து 10 முறை விலக்கு அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, மீண்டும் விலக்கு அளிக்க மறுத்துவிட்டது.

குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்துக்கு முன் அவர் சாதாரண மனிதர்தான் என கூறிய நீதிமன்றம், ஜெகன்மோகன் ஜனவரி 10-ம் தேதி கட்டாயமாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி இன்று ஜெகன்மோகன் ரெட்டி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்