
தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’. தனுஷின் 51வது படமாக உருவாகியுள்ள இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்பும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் ஜூன் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். அந்த வகையில் பட அனுபவத்தை பகிர்ந்த தனுஷ், படக்குழுவினரைப் பற்றி தனது அனுபவங்களை பகிர்ந்து வந்தார். அப்போது இயக்குநர் சேகர் கம்முலா குறித்து தனுஷ் பேசுகையில், “இது கலிகாலம். வெறுப்பு ஓங்கி நிக்குற காலம். சேகர் கம்முலா தூய்மையான மனிதர். ஒரு ஏஞ்சல் வானத்தில் இருந்து வந்தால் அது அவர்தான். ரொம்ப அப்பாவி. அவரை பார்க்கும் போதெல்லாம் இந்த மனுஷன் எப்படி பொழைப்பார்னு தோனும். ஆனா ஒன்னு சொல்றேன்.. இந்த கலிகாலத்துல அந்த மாதிரி மனுஷன் இருக்குறதுனாலத்தான் மழை பெய்யுது. அந்த மழையுல தான் நம்மெல்லாம் செழிச்சிட்டு இருக்கோம்.
கோவிட் டைம்ல வீடியோ கால்-ல ஒரு 20 நிமிஷம் அவர் கதை சொன்னார். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. நடிக்கிறேன்னு சொல்லிட்டன். அப்புறம் 2 வருஷமா ஆள காணோம். அந்த ரெண்டு வருஷத்துல ஸ்க்ரீன்ப்ளே பண்ணி திரும்பவும் என்கிட்ட கதை சொன்னார். அப்பவும் எனக்கு பிடிச்சிருந்துச்சு. ஆனா இவ்ளோ பெரிய படத்தை இவர் ஹாண்டில் பன்னுவாரான்னு ஒரு டவுட். ஏன்னா அவரைப் பற்றி முன்னாடி தெரியாது. விசாரிச்சா எல்லாரும் பயங்கர பில்டப் கொடுத்தாங்க. சரின்னு அவரை நம்பி ஷூட்டிங்கிற்கு போனா... திருப்பதி அடிவாரத்துல நடுரோட்டுல உச்சி வெய்யில்ல கீழ உக்காந்து அம்மா.... தாயே... அப்பிடின்னு பிச்சை எடுக்க விட்டார். ஆனா அப்படி கை நீட்டி பிச்சை எடுக்கும் போதுதான் தெரிஞ்சது, நம்ம ஓடிட்டு இருக்குற ஓட்டமெல்லாம் எவ்ளோ அர்த்தமில்லாததுன்னு. இங்கே அவ்ளோ போட்டி, பொறாமை இருக்கு.
முன்னெல்லாம் நம்ம பெரிய ஆளாகனும்னு உழைப்போம். இப்பல்லாம் அடுத்தவன் உழைப்பை எப்படி கெடுக்குறதுன்னுன்னு உழைக்குறாங்க. அப்படி நின்னைக்குறவங்க ஒரு வாட்டி கை நீட்டி அம்மா.. தாயேன்னு சொல்லி பாருங்க. திங்குற ஒரு வேளை சோத்துக்கும் மழை வெயில்லுனு ஒதுங்குற கூறைக்கும் நாம எவ்ளோ நன்றியோடு இருக்கனும்னு புரியும். அது ஒரு நல்ல அறிவார்ந்த எக்ஸ்பீரியன்ஸ். இதுக்கு முன்னாடி காசில அது மாதிரி ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சுது. ராஞ்சனா பட ஷூட்டிங் அப்போ, ஒரு 15 பிணங்கள் என்னை சுத்தி எறிஞ்சிட்டு இருந்துச்சு. அவங்க கேமரா எடுத்துட்டு தூரமா போய்ட்டாங்க. எனக்கு ஷூட்டிங்குன்னே மறந்து போச்சு. அவங்களும் கண்ணுக்கு தெரியாத மாதிரி போய்டாங்க. எங்க இருக்காங்கன்னே தெரியல. அப்போ நான் நடுவுல நிக்கும் போது என்னையே மறந்து நிம்மதியா இருந்தேன். எல்லாமே மாயைன்னு அங்க நிக்கும் போது புரிஞ்சுது. அந்த மாதிரி ஒரு அறிவுப்பூர்வமான எக்ஸ்பீரியன்ஸ் இந்த படத்துல திருப்பதி அடிவாரத்துல நடிக்கும் போது கிடைச்சுது. அதுக்கு ரொம்ப நன்றி. குபேரா படம் ரொம்ப ஸ்பெஷலான படம். கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும். நான் ரொம்ப கான்ஃபிடண்டா இருக்கேன். என்னை நம்பி பார்க்கலாம்” என்றார்.