
சந்தேகத்தின் பேரில் மனைவியை சூடான இரும்பு ராடால் அடித்தது மட்டுமல்லாமல், அவரது பெண்ணுறுப்பில் மிளகாய் பொடியை திணித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே தியோரியா கோத்தி பகுதியைச் சேர்ந்தவர் சத்ருகன் ராய். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். தனது மனைவி வேறு ஒரு நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக சத்ருகன் ராய் சந்தேகமடைந்துள்ளார். இதனால், மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்று மனைவியின் கை கால்களை கயிற்றால் கட்டி வைத்து சூடான இரும்பு ராடைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளார். அவரது பெண்ணுறுப்பில் மிளகாய் பொடியை வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக மனைவியை ஒரு அறையில் பூட்டி வைத்து உணவு, தண்ணீர் என எதுவும் கொடுக்காமல் உடல் ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், சத்ருகனும்மற்றும் அவரது பெற்றோரும் அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளனர். இதனால், அந்த பெண் வலி தாங்க முடியாமல் கதறி துடித்துள்ளார். இவரது அலறல் சத்தத்தை கேட்டும், அக்கம்பக்கத்தினர் யாரும் உதவ முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த 15ஆம் தேதி எதேர்ச்சியாக அந்த பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு வந்து அவரை காப்பாற்றியுள்ளார்.
இதனையடுத்து, அந்த பெண் சகோதரரால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சத்ருகனை கைது செய்தனர். மேலும், சத்ருகனின் பெற்றோர் மற்றும் சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.