Survivor explained how to escaped from ahmedabad Plane crash

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் நேற்று (12.06.2025) மதியம் இன்ஜின் செயல் இழப்பால் விமானம் புறப்பட்ட 5வது நிமிடத்திலேயே விபத்தானது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 229 பயணிகள் என மொத்தம் 241 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

பயணிகளில் 169 இந்தியர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 7 பேர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதில், குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 14 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். விமானம் வானிலேயே செயலிழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் அந்த பகுதியில் இருந்த மருத்துவ கல்லூரியின் மாணவர்களின் விடுதி பலத்த சேதமடைந்துள்ளது. இந்த விமான விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. விமான விபத்து தொடர்பான வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், விமான விபத்தில் இருந்து உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஒரே நபரான ரமேஷ் விஸ்வாஸ் குமார் இன்று (13-06-25) தனது இறுதி நிமிடம் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘விமான புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பயங்கர சத்தம் கேட்டு விபத்தானது. விமானம் நொருங்கும் போதே தரையை பார்த்தேன். தரையை பார்த்தவுடன் நான் அணிந்திருந்த சீல் பெல்டை கழற்றிவிட்டேன். சீட் உடைந்து தனியாக வந்ததால், அவசர வழி வழியாக அங்கிருந்து குதித்து தப்பினேன். அதிலும், ஒரு பக்க அவசர வழி சேதமடைந்த நிலையில் இருந்ததால், மறுபக்க அவசர வழி வழியாக குதித்து வெளியேறினேன். எனது இடது கையில் தீ பிடித்தது, உரிய நேரத்தில் என்னை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றினர். விமான விபத்தில் நான் உயிர் தப்பியது எப்படி என்பது எனக்கே தெரியவில்லை. என் கண்முன்னே விமான பணி பெண்கள், பயணிகள் அனைவரும் இறப்பதை பார்த்தேன்’ என்றார். விமானத்திற்குள் ரமேஷ் விஸ்வாஸ் குமார் 11 ஏ இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.