
1972களில் வெளியேறி உலகளவில் பரபரப்பைக் கிளப்பிய அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழல் காரணமாக அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1974ல் ராஜினாமா செய்ய நேர்ந்தது. அந்த ரேஞ்ச்சுக்கு சூட்டைக் கிளப்பியிருக்கிறது நெல்லையின் அ.தி.மு.க. கால ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள். அந்த வழக்கில் கடுமைகாட்டிய ஹைகோர்ட் விசாரணையின் விளைவு விரைவில் நடவடிக்கைகள் பாயலாம் என்பதே லேட்டஸ்ட் நிலவரம். இந்த முறைகேடுகளையும் இதன் மெகா மணல் கொள்ளைகள் பற்றியும் 2020களிலேயே பார்ட் பார்ட்டாக வெளியிட்டது நக்கீரன். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் பல்வேறு நகரப்பகுதிகளின் பழமைத் தன்மையை மாற்றி பளபளப்பாக்கிற ஸ்மார்ட் சிட்டித் திட்டங்கள் மத்திய அரசின் பங்களிப்போடு அறிமுகப்படுத்தப்பட்டன.
அத்திட்டத்தின் ஒரு பகுதி தான் நெல்லைக்கான ஸ்மார்ட் சிட்டித் திட்டம். அதற்காக நெல்லை மாநகர எல்லைக்குள் மேற்கொள்ளப்பட விருக்கிற ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு மொத்தமாக ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு மாநகராட்சியின் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளின் பொறுப்பில் அவைகள் ஒப்படைக்கப்பட்டன. நெல்லையில் ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தின் கீழ் ஒரு பார்ட்டாக நெல்லை ஜங்ஷன் பகுதியில் செயல்பட்டு வந்த பழமையான பேருந்து நிலையத்தின் கட்டுமானங்களை மாற்றி புதிய கட்டுமானமாகப் பேருந்து நிலையமாகப் புனரமைப்பதற்காக 2020களில் ரூ.76.45 கோடிகள் ஒதுக்கப்பட்டு அல்வா நகர மாநகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

சுமார் 4.25 ஏக்கரில் அமைந்துள்ள அந்தப் பேருந்து நிலையத்தினருகே தாமிரபரணியாறு பாய்ந்தோடுகிறது. ஆக இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்படுவதற்கு முன்பிருந்தே, அப்பகுதி தாமிரபரணியின் ஆற்று வழிப்பாதையாகத்தானிருந்திருக்கிறது என்கிறார்கள் நெல்லை வாசிகள்.
திட்டப்படி பேருந்து நிலையத்தின் பழைய கட்டுமானங்களை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய கட்டுமானங்களை அமைக்கிற வகையில் தோண்டுகிற போது ஒரு சில அடிக்குக் கீழாகவே சரசரவென மணல் கிடைத்திருக்கிறது. பாறைகளே அல்லாமல் வெறும் மணல் பாங்கான பகுதி என்பதால் தோண்டத் தோண்ட தரமான மணல் கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் அந்த மணல்களை அதன் மதிப்பறியாமல் காண்ட்ராக்ட்டர்களால் கடத்தப்பட்டு விற்பனையாகியிருக்கிறது.

ஒரு கட்டத்தில் தோண்டத் தோண்ட தங்கச் சுரங்கம் போல் மணல் சுரங்கம் வந்து கொண்டேயிருக்க மணல் கடத்தலில் மயங்கியவர்கள் ஒரு வெலவலுக்கும் மேலேயே மணலைத் தோண்டி மலைபோல் குவித்தது அவர்களையே திகைக்க வைத்திருக்கிறது. இப்படி விதியை மீறி ஐம்பத்தி நான்காயிரம் கன மீட்டா் அளவு மணல் தோண்டியெடுக்கப்பட்டு அத்தனையும் லோடு லோடாக வெளிமாநிலத்திற்குக் கடத்திக் கோடி கோடியாகக் கரன்சியை அள்ளியிருக்கிறார்கள்.
அரசே என்றாலும் விதிகளின்படி கட்டு மானங்கள் கட்டுவதற்கு உரிய துறையின் முறையான அனுமதியும் பெறாமல், குறிப்பிட்ட இடம் பொருட்டு சுற்றுச் சூழல், பசுமை அமைப்புகளில் எவ்வித தடையில்லாச் சான்றுகளும் பெறாமல், பொ.ப.து. அதிகாரிகள் சுரங்கங்களின் மாவட்ட இணை இயக்குனர் லெவல் அதிகாரிகள், உள்ளிட்ட ஸ்மார்ட் சிட்டிக்கான கட்டுமான அதிகாரிகள் என்று பல்வேறு மட்டங்களில் துறைகளில் உரிய அனுமதிபெறாமல், விதி மீறி தோண்டப்பட்டு அளவுக்கு அதிகமான அளவு தரமான ஐம்பத்தி நான்காயிரம் கனமீட்டர் மணல் அள்ளப்பட்டு அண்டை மாநிலத்திற்குக் லோடு லோடாகக் கடத்தப்பட்டதில் சுமார் ரூ.240 கோடிகளுக்கு மேலான மதிப்பிலானவைகள் கொள்ளை போயிருக்கின்றன. அரசுக்கு வரவேண்டிய இந்த வருவாய்கள் இழப்பீடாகியிருக்கிறது.

தவிர இத்தனை வகைகளையும் மேற் பார்வையிட வேண்டிய ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள், மாநகராட்சியின் பொறுப்பு அதிகாரிகள் கவனம் வைத்தார்களா?. துணை போயிருக்கிறார்களா?. என்றும் அப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சியர், மாவட்ட சுரங்கத்துறையின் இணை இயக்குனர், போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சியின் ஆணையர், ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தின் கண்காணிப்பாளராக செயல்பட்ட மாநகராட்சியின் பொறியாளர், பொ.ப.து. அதிகாரிகள், காண்ட்ராக்ட்டர்கள், என்று இதனைக் கண்காணிக்க வேண்டிய இந்த 26 அதிகாரிகள் இந்தக் கொள்ளையை எப்படி அனுமதித்தார்கள். அவர்களறியாமல் நடப்பதற்கு வாய்ப்பில்லை.
மேலும் இத்திட்டத்தில் உபரியாக முறையான அனுமதியோ, திட்ட வரையளவோயின்றி கணக்கில் எழுதப்படாமல் ரூ.8.92 கோடி அளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது. தவிர இந்த மணல் கொள்ளையில் அப்போதைய ஆளும் அ.தி.மு.க. வி.வி.ஐ.பி.கள், எதிர்க்கட்சி பிரதிநிதிகள், பொறுப்பாளர்கள் என்று பலரும், தங்களுக்கான பங்குகளையும் வாங்கிக் கொண்டு பலனடைந்திருக்கிறார்கள். சைலன்ட் ஆகியிருக்கிறார்களாம் என்று நேரிடையாகவும் மறைமுகமாகவும் இந்த கனிம கொள்ளையில் பலனடைந்தவர்கள் பற்றியும், திட்டத்தில் நடந்த முறைகேடுகள் அனைத்தையும் ஆவணமாகத் திரட்டிக் கொண்டு போய் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்காக 2020ன் போது நடவடிக்கைக்காகச் சமர்ப்பித்திருக்கிறார் நெல்லையைச் சேர்ந்த சுடலைக்கண்.

வழக்கில் முகாந்திரமிருப்பதைப் பரிசீலித்த நீதியரசர்கள் விரிவாகவே இந்தக் கனிமக் கொள்ளையினை விசாரித்த சமயத்தில், ஸ்மார்ட் சிட்டித் திட்டப்படி புதிய கட்டுமானங்கள் அமைக்கப்பட்ட வேண்டிய இடங்கள் ஏற்கனவே தாமிரபரணி ஆற்று வழிப்பாதையானது கட்டுமானம் பொருட்டு தோண்டப்பட்டதில் ஆற்று மணல் கிடைத்திருக்கிறது. அதனால் அந்த மணலில் அரியவகையான தாதுமணல் வகைகள் கலந்துள்ளனவா என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட அந்த மணல் பகுதிகள், தாது மணல் வல்லுநர்களால் தரம் பற்றி ஆய்வு செய்யப்பட்டிருக்கிறதாம்.
தென்மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிற தாமிரபரணி பாபனாசம் வழியாகத் தரையிறங்கி, முகத்துவாரமான நெல்லையில் சங்கமித்து பாய்வதால் அது அடித்துக் கொண்டு வருகிற மணலில் அரிய வகையான மினரல்கள் எனப்படுகிற தாது மணல் கனிமங்கள் கலந்துள்ளன.

குறிப்பிட்ட ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தில் புனரமைப்பு பணிக்காகத் தோண்டியெடுக்கப்பட்ட இருபத்திநான்காயிரம் கனமீட்டர் மணலில் அரியவகையான மினரல்கள் எனப்படுகிற தடை செய்யப்பட்ட தாது மணல் (30%) முப்பது சதவிகிதம் கலந்துள்ளன. இல்லுமினைட், கார்னெட், தோரியம், மோனோசைட் ஆகிய தாதுக்கள் கலந்ததே மினரல்கள் எனப்படுபவை, மணலைத் தரம் பிரித்தால் இவைகள் வெளிப்படும் எனவே கடத்தப்பட்ட மணலில் தடை செய்யப்பட்ட தாதுக் கனிமங்களும் கலந்திருப்பதால் அதன் மதிப்பு பல கோடிகள் உயரலாம் என வல்லுநகர்களால் ஆய்வறிக்கை கோர்ட்டில் தாக்கலாகியிருக்கிறதாம்.
இதையடுத்தே இவ்வழக்கை சீரியாசாக எடுத்துக் கொண்ட நீதியரசர்கள், இவ்விவகாரத்தில் தொடர்புடைய 26 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நான்கு மாதங்களில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. யூனிட்டிற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

நான்கு வருடங்களுக்குப் பின்பு தற்போது இந்த வழக்கு கோப்பிற்கு எடுக்கப்பட்டு மீண்டும் விசாரணை தீவிரமாகியிருக்கிறது. பொது நல வழக்காகத் தாக்கல் செய்த நெல்லை சுடலைக்கண்ணிடம் நாம் பேசியபோது, இந்த வழக்கு நீதிமன்றத்திலிருப்பதால் நான் இது குறித்து அதிகம் பேசக் கூடாது. ஆனாலும் 2021ன் போது நீதியரசர்களான கிருபாகரன், புகழேந்தி அமர்வு நான்கு மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். ஆனால் நான்கு வருடமாகியும் சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது விசாரணையில நான்கு மாதங்கள் அவகாசம் கொடுத்தும் நடவடிக்கையில்லை. ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இத்தனை ஆதாரங்கள், காரணமானவர்கள் பற்றி தகவல் கொடுத்தும் என்ன நடவடிக்கை? எத்தனை பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டடுள்ளது? ரிமாண்ட் செய்யப்பட்டு பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டுள்ளனவா என கேள்வி மேல் கேள்வி கேட்ட உயர் நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி.க்கு 4 வாரத்திற்குள் ரிப்போர்ட் செய்ய உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் நாங்கள் இதனை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டுமென்று கேட்டுள்ளோம். அதற்கும் வாய்ப்பிருக்கிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது இந்த வழக்கு என்றவர், இதில் குறிப்பிட்ட 26 அதிகாரிகள் மீது நடவடிக்கை மட்டுமன்றி மறைமுகமாகப் பலனடைந்த அப்போதைய அரசியல் புள்ளிகள், தனியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவு என்கிறார். வரும் தேர்தலுக்குள் நடவடிக்கை பாயலாம் என்பதால் தொடர்புடைய அதிகாரிகள் மட்டுமன்றி அல்வா நகர அரசியல் புள்ளிகளும் உள்ளுக்குள் அச்சத்திலிருக்கிறார்களாம்.