Skip to main content

'நீயா நானா பார்த்து விடுவோம்: தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா?'- பாமக ராமதாஸ் மீண்டும் ஆதங்கம்

Published on 12/06/2025 | Edited on 12/06/2025
 'Let's see whether it's you or me: Don't I have the right to take the lead?' - PMK's Ramadoss again raises concerns

பா.ம.க.வின் (நிறுவன) தலைவர் ராமதாஸுக்கும், அவரின் மகனும், அக்கட்சியின் (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் கடந்த 5 ஆம் தேதி ராமதாஸை, அன்புமணி சந்தித்துப் பேசியிருந்தார். அதே சமயம் ராமதாஸ் - அன்புமணியின் இந்த சந்திப்பைத் தொடர்ந்து குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோரும் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்திருந்தனர்.

இத்தகைய சூழலில் தான் பாமகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட வழக்கறிஞரான பாலுவை அவர் வகித்து வந்த சமூக நீதிப் பேரவையின் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். மேலும் பாலுவிற்குப் பதிலாக வி.எஸ். கோபு என்ற வழக்கறிஞரை சமூக நீதிப் பேரவையின் புதிய தலைவராக நியமித்து ராமதாஸ் அறிவித்திருந்தார்.

 'Let's see whether it's you or me: Don't I have the right to take the lead?' - PMK's Ramadoss again raises concerns

தொடர்ந்து சமூக நீதி பேரவை சார்பில் ஒரு சிறப்புச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று (11.06.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி சமூகநீதி பேரவையின் தலைவராக உள்ள பாலுவை நீக்குவதற்கான அதிகாரம் யாருக்கும் கிடையாது. இரண்டில் ஒரு பங்கு நிர்வாகிகள் கூடி முடிவு எடுத்தால் மட்டுமே அவரை பதவியில் இருந்து நீக்க முடியும் என்ற வரையறை இருக்கிறது. அதுதான் அறக்கட்டளையின் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே பாலுவே தொடர்ந்து அதன் தலைவராகச் செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மேலும் இந்த அமைப்பின் புரவலராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (12/06/2025) செய்தியாளர்களை சந்தித்த பாமக ராமதாஸ் பேசுகையில், ''பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் பேச்சுவார்த்தை டிராவில் முடிந்துள்ளது. இதற்கு முன்பு 14 பஞ்சாயத்துகள் நடந்தது. நான் தொடங்கிய 34 அமைப்புகளில் ஒன்றிரண்டு பேர் அல்லது நான்கு பேரே எனக்கு பஞ்சாயத்து பண்ண வந்தார்கள். இதுதான் தலைவிதி என்பது என்று எண்ணிக் கொண்டு அதையும் ஏற்றுக் கொண்டேன். இந்த 14 பஞ்சாயத்துகளில் நான் தொடங்கிய 34 அமைப்புகளில் இருந்து வந்தவர்கள் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள்.

 'Let's see whether it's you or me: Don't I have the right to take the lead?' - PMK's Ramadoss again raises concerns

என்ன தீர்ப்பு என்றால் நான் இங்கேயே இருந்து கொண்டு கட்சியை வளர்ப்பது. அவர் (அன்புமணி) வெளியிலே போய் மக்களை பார்த்து கட்சியை வளர்ப்பது. இதனால் அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என கூறினேன். அதற்காக கௌரவத் தலைவரையும், சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவரையும் நீங்கள் போய் அன்புமணியை நாளை காலை மாநாட்டுக்கு முன்பு அவரை பார்த்துவிட்டு வாருங்கள் என்றேன். ஆனால் அன்புமணி சந்திக்க மறுத்துவிட்டார். இதனால் என்னுள் இருக்கின்ற இயற்கையான கோபம் கொஞ்சம் பொங்கி எழுந்து 'நீயா நானா? பார்த்துடுவோம் என்று அந்த முடிவுக்கு வந்தேன். இப்பொழுது உங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

ராமதாஸ் என ஒருவன் இருக்கிறானே. அவன் பெயரைதானே பின்னாலே போட்டுக் கொள்கிறோம். அவனுக்கு என்னதான் கொடுப்பது என கேட்கும் பொழுது 'கேட்டை சாத்திக்கொண்டு கொள்ளு பேரன்கள் உடன் விளையாடட்டும்' என்று சொல்லக்கேட்டேன். கேட்டை சாத்திக் கொண்டு இருக்க முடியாது. என்னை பார்ப்பதற்கு ஆயிர கணக்கில் வருபவர்கள். யார் வந்தாலும் பார்ப்பேன். நேற்று மட்டும் 300 பேரை பார்த்துள்ளேன். அப்பாயிண்ட்மெண்ட் கிடையாது. போனில் பேசுவதாக இருந்தால் கூட லேண்ட்லைனை நானே எடுப்பேன் நானே வைப்பேன். மற்ற யாரும் தொடக்கூடாது. இப்படி எல்லாம் மக்களோடு நான் 46 வருடங்களாக பழகி வருகிறேன். அவர்கள் என்னை உயிராக நினைக்கிறார்கள். நான் அவர்களை உயிருக்கும் மேலாக தெய்வங்களாக நினைக்கிறேன். என்னுடைய கட்சித் தொண்டர்களை வழிகாட்டிகளாக நினைக்கிறேன். 46 ஆண்டுகள் உழைத்து உருவாக்கி காப்பாற்றிய கட்சியில் இன்னும் ஒரு ஆண்டுகள் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? எனக்கு உரிமை இல்லையா என கேட்பதே எனக்கு அவமானமாக இருக்கிறது.

ஒவ்வொரு செங்கல்லாக பார்த்து கட்டிய  பாட்டாளி மக்கள் கட்சி என்ற மாளிகையில் கூட்டிக்கொண்டு வந்து அமர்த்திய என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகின்ற அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் இருக்கிறது. என்னை நடைப்பிணம் ஆக்கிவிட்டு நடைபயணம் செல்ல இருக்கிறார்கள். பாலு சரியாக செயல்படவில்லை என்பதால்தான் மாற்றினேன். நான் தான் பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர். சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லாருமே என்னையே ஆதரிப்பார்கள். மக்கள் என் பின்னால்தான் இருக்கிறார்கள். அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க மாட்டேன். உயிருள்ள என்னை உதாசீனப்படுத்திவிட்டு என படங்களை வைத்து உற்சவம் செய்கிறார்கள்'' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சார்ந்த செய்திகள்