Skip to main content

நான் ஒரு 'ஆம் ஆத்மி'... ராகுலுக்கு இந்த கடனை திருப்பித்தர முடியாது - பஞ்சாபின் புதிய முதல்வர்!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

charanjit singh channi

 

பஞ்சாப் மாநிலத்தில் உட்கட்சி பூசல் பெரிதானதையடுத்து, அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங், தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் தலைமை தேர்ந்தெடுத்தது. அவர் இன்று (20.09.2021) பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

 

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் ஒரு ஆம் ஆத்மி என கூறியுள்ளார். பதவியேற்ற பிறகு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறியதாவது, “'ஆம் ஆத்மி' பற்றி மற்ற கட்சிகள் பேசிக்கொண்டிருக்கும்போது, ஆம் ஆத்மி (சாதாரண மனிதன்) ஆகிய நான் இங்கு அமர்ந்திருக்கிறேன். என் தந்தை மற்றவர்களின் வீடுகளில் கூடாரம் அமைப்பவர். காங்கிரஸ் ‘ஆம் ஆத்மி’யை உயர்த்தியுள்ளது. ராகுல் காந்திக்கு இந்தக் கடனை என்னால் திருப்பி செலுத்த முடியாது. அம்பேத்கரின் சிந்தனையுடன் ஒத்துபோவோரை ராகுல் காந்தி ஆதரிக்கிறார். ராகுல் காந்திக்கு ஒவ்வொரு பஞ்சாபி சார்பாகவும், கேப்டன் அமரீந்தர் சிங் உட்பட ஒவ்வொரு எம்.எல்.ஏ. சார்பாகவும் நன்றி தெரிவிக்கிறேன்.

 

மக்களுக்கு சேவை செய்ய ராகுல் காந்தி எனக்கு இந்த வாய்ப்பை அளித்துள்ளார். நான் ஒரு 'ஆம் ஆத்மி'. நான் ஒரு சாதாரண மனிதனின், விவசாயியின், ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதி. நான் பணக்காரர்களின் பிரதிநிதி அல்ல. மணல் அள்ளுபவர்கள் மற்றும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னை சந்திக்க வர வேண்டாம். நான் உங்கள் பிரதிநிதி அல்ல. பஞ்சாப், விவசாயம் அதிகமுள்ள மாநிலம். நான் விவசாயிகளுடன் இருக்கிறேன்.

 

பஞ்சாப் அரசு விவசாயிகளுடன் நிற்கிறது. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுமாறு நாங்கள் மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகளின் தண்ணீர் மற்றும் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்வோம். கட்சிதான் முதன்மையானது. முதல்வரோ அல்லது அமைச்சரவையோ அல்ல. கட்சியின் சித்தாந்தத்தின்படி அரசு செயல்படும். பஞ்சாப் மக்களுக்காக கேப்டன் அமரீந்தர் சிங் நிறைய நற்பணிகளை மேற்கொண்டார். நாங்கள் அவருடைய பணியை முன்னெடுப்போம்.”

இவ்வாறு சரண்ஜித் சிங் சன்னி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.